1984 சீக்கியர் படுகொலை- சஜ்ஜன் குமாருக்கு மரண தண்டனை விதிக்க வலியுறுத்தல்- காங்கிரஸ் அதிர்ச்சி!
டெல்லி: 1984-ம் ஆண்டு டெல்லியில் சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி. சஜ்ஜன்குமாருக்கு அதிகபட்சமான மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று அரசு தரப்பில் வாதிடப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை வரும் 21-ந் தேதி நடைபெறும்.
1984-ம் ஆண்டு பிரதமர் இந்திரா காந்தி படுகொலையைத் தொடர்ந்து டெல்லியில் பல்லாயிரக்கணக்கான சீக்கியர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டனர். உலகையே அதிரவைத்த இந்த சீக்கியர் இனப்படுகொலை வழக்குகள் விசாரணை இப்போதும் நடைபெற்று வருகிறது.

டெல்லி சீக்கியர்கள் இனப்படுகொலை வழக்கில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்பி சஜ்ஜன் குமார் ஏற்கனவே ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார். சஜ்ஜன் குமார் மீது மற்றொரு 'இரட்டை கொலை' வழக்கில் கடந்த வாரம் அவர் குற்றவாளி என டெல்லி நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.
இதனையடுத்து சஜ்ஜன் குமாருக்கான தண்டனை விவரங்கள் குறித்த விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. டெல்லி நீதிமன்றத்தில் அரசு தரப்பில் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்யப்பட்ட வாதத்தில், நிர்பயா பலாத்கார படுகொலையைவிட கொடூரமான சீக்கியர் இனப்படுகொலை வழக்கு. நிர்பயா வழக்கிலாவது ஒரே ஒரு இளம்பெண் இலக்கு வைக்கப்பட்டிருந்தார்; ஆனால் இந்த வழக்கில் ஒட்டுமொத்த சீக்கியர் இனமும் தாக்குதலுக்குள்ளாக்கப்பட்டது. ஆகையால் அரிதினும் அரிதான வழக்காக கருதி குற்றவாளி சஜ்ஜன்குமாருக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்ட போது சஜ்ஜன் குமார் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்; சீக்கியர்கள் பெரும் எண்ணிக்கையில் அழித்தொழிக்கப்படுவதற்கு இந்த படுகொலைகள் காரணமாக இருந்தன. ஆகையால்தான் சஜ்ஜன்குமாருக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்துவதாகவும் அரசு தரப்பு வாதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணை வரும் 21-ந் தேதி நடைபெற உள்ளது.
சீக்கியர் படுகொலையின் பின்னணி என்ன?
1970களின் இறுதியில் இந்தியாவில் சீக்கியர்கள் வாழும் பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களை ஒருங்கிணைத்து 'காலிஸ்தான்' என்ற சீக்கியர் தனிநாடு அமைக்க ஆயுதப் போராட்டத்தை பிந்தரன் வாலே தொடங்கினார். சீக்கியர்களின் இந்த தனிநாடு கோரி நடத்தப்பட்ட ஆயுதப் போராட்டம் நாட்டின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்தது. இதனையடுத்து 1984-ம் ஆண்டு சீக்கியர்களின் இந்த ஆயுதப் போராட்டத்தை அழித்தொழிக்க ஆபரேசன் ப்ளூ ஸ்டார் நடவடிக்கையை ராணுவம் மேற்கொண்டது. சீக்கியர்களின் புனித தலமான அமிர்தசரஸ் பொற்கோவிலுக்குள் ராணுவம் உள்ளே நுழைந்து பிந்தரன்வாலே உள்ளிட்ட ஆயிரக்கணக்கான சீக்கிய ஆயுதக் குழுவினரை அழித்தொழித்தது. இந்த ராணுவ நடவடிக்கைக்கு பழிவாங்கும் வகையில், பிரதமராக இருந்த இந்திரா காந்தி அம்மையாரை அவரது சீக்கியர் பாதுகாவலர்களே சுட்டுப் படுகொலை செய்தனர். இந்திரா காந்தி படுகொலைக்கு பழிவாங்கும் வகையில் டெல்லியில் ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டனர். சீக்கியர்கள் சொத்துகள் அனைத்தும் சூறையாடப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டன. இந்த இனப்படுகொலை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இத்தகைய வழக்குகளில்தான் காங்கிரஸ் எம்பியாக இருந்த சஜ்ஜன் குமார் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார்; மற்றொரு வழக்கில் அவருக்கு மரண தண்டனை விதிக்க வலியுறுத்துகிறது அரசு தரப்பு. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்பி சஜ்ஜன்குமாருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டால் அந்த கட்சிக்கு மிகப் பெரும் பின்னடைவாகவும் பார்க்கப்படும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.












Click it and Unblock the Notifications