இந்தியாவில் தடை செய்யப்பட்ட ‘நிர்பயா’ ஆவணப்படம் ஒளிபரப்பு: பிபிசி.,க்கு மத்திய அரசு நோட்டீஸ்
டெல்லி: இந்தியாவில் தடை விதிக்கப்பட்ட நிர்பயா ஆவணப்படத்தை வெளிநாடுகளில் ஒளிபரப்பியது தொடர்பாக பிபிசி தொலைக்காட்சி நிறுவனத்துக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கடந்த 2013ம் ஆண்டு தலைநகர் டெல்லியில் ஓடும் பேருந்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார் மருத்துவமாணவி நிர்பயா. நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்தை மையமாக வைத்து, ‘இந்தியாவின் மகள்' என்ற ஆவணப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.
இதனை லெஸ்லி உட்வின் என்ற பெண் இயக்குநர் தயாரித்துள்ளார். இந்த ஆவணப்படம் வரும் 8ம் தேதி மகளிர் தினத்தை முன்னிட்டு ஒளிபரப்பப்படுவதாக இருந்தது.
ஆனால் இந்த ஆவணப்படத்தில் பலாத்கார குற்றவாளி ஒருவரின் பேட்டியும் இடம் பெற்றிருந்தது சர்ச்சையை உண்டாக்கியுள்ளது. அந்த நபர் கூறிய வார்த்தைகளுக்கு கடும் எதிராக கண்டனங்களும், எதிர்ப்பும் உருவானதைத் தொடர்ந்து, இந்த ஆவணப்படத்தை ஒளிபரப்பத் தடை விதித்தது மத்திய அரசு.
ஆனால், தடையை மீறி முன்னதாகவே நேற்றிரவு லண்டனில் இருந்து பிபிசி இந்த ஆவணத்தை ஒளிபரப்பியது. பிபிசியின் இந்த செயலுக்கு கண்டனங்கள் வலுத்து வருகின்றன.
இந்நிலையில், இந்த ஆவணப்படத்தை ஒளிபரப்பியது குறித்து விளக்கம் கேட்டு பிபிசிக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
யூடியூபிலிருந்து நீக்கம்:
இந்த நிலையில் தற்போது இந்தப் படம் யூடியூபிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. இது உணர்வுப் பூர்வமான விஷயம் என்பதால், இந்த ஆவணப்பட வீடியோவை யூடியூப்பில் இருந்து நீக்குமாறு மத்திய அரசு கேட்டுக் கொண்டது. அதன்படி, இந்தியாவில் இந்த ஆவணப்பட வீடியோவைத் தடை செய்துள்ளது யூடியூப்.