மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி படித்ததுதான் என்ன? வேட்பு மனுக்களில் முரண்பட்ட தகவல்கள்!!
டெல்லி: மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிரிதி இரானியின் கல்வித் தகுதி பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. அவர் தாக்கல் செய்த வேட்புமனுக்களிலும் முரண்பட்ட தகவல்கள் இடம்பெற்றிருப்பதால் இவ்விவகாரம் விஸ்வரூபமெடுத்துள்ளது.
பிரபல டி.வி. நடிகையான ஸ்மிரிதி இரானி ராஜ்யசபா எம்.பி.யாவார். இவர் லோக்சபா தேர்தலில் பாரதிய ஜனதா சார்பில் அமேதி தொகுதியில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
இருப்பினும் ஸ்மிரிதி இரானிக்கு பிரதமர் நரேந்திர மோடி அமைச்சரவையில் மனித வள மேம்பாட்டுத் துறை ஒதுக்கப்பட்டு உள்ளது. இது குறித்து நேற்று ட்விட்டரில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் அஜய் மக்கான் விமர்சித்து இருந்தார்.
கொளுத்திப் போட்ட மக்கான்
அதில், மோடியின் அமைச்சரவை என்ன மாதிரியாக இருக்கிறது? ஸ்மிரிதி இரானி பட்டதாரி கூட கிடையாது. அவர், மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சராக நியமிக்கப்பட்டு இருக்கிறார். தேர்தல் ஆணையத்துக்கு அவர் அளித்த பிரமாண பத்திரத்தின் 11-ம் பக்கத்தை பார்த்தால் அவரது படிப்பு பற்றி தெரியும். ராஜ்யசபாவில் தமது கல்வித் தகுதியை மறைத்துவிட்டார். இவ்வாறு அவர் கூறியிருந்தார்.
சோனியா கல்வித் தகுதி என்ன?
இவ்விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அப்படியானால் காங்கிரஸ் தலைவர் சோனியாவின் கல்வித் தகுதி என்ன என்று மற்றொரு மத்திய அமைச்சர் உமாபாரதி கேள்வி எழுப்பினார். இதைத் தொடர்ந்து அரசியல் அரங்கில் கடும் விவாதங்கள் தொடங்கின.
வேட்புமனுக்களில் முரண்பாடு
இந்நிலையில் ஸ்மிரிதி இரானி தேர்தலின் போது கல்வித் தகுதி பற்றி வேட்புமனுக்களில் முரண்பாடான தகவல்களைத் தெரிவித்திருப்பது தற்போது தெரியவந்துள்ளது.
2004-ல்...
2004-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் டெல்லி சாந்தினி சவுக் தொகுதியில் பாரதிய ஜனதா சார்பில் போட்டியிட்டார் ஸ்மிரிதி இரானி. அப்போது தாக்கல் செய்த வேட்புமனுவில், அவர் 1996-ம் ஆண்டு டெல்லி பல்கலைக்கழகத்தில்(அஞ்சல் வழி கல்வி) பி.ஏ. படிப்பை முடித்ததாக தெரிவித்திருந்தார்.
2014-ல் முரண்பாடு
ஆனால் லோக்சபா தேர்தலில் அமேதி தொகுதியில் போட்டியிட்டபோது 1994-ம் ஆண்டு டெல்லி பல்கலைக்கழகத்தில் வணிகவியல் துறையில் பகுதி-1-ல்(அஞ்சல் வழிக்கல்வி) இளநிலை பட்டம் பெற்றிருப்பதாக இரானி குறிப்பிட்டிருக்கிறார்.
ஏன் முன்பே குறிப்பிடவில்லை?
1994ஆம் ஆண்டு படித்திருந்தால் அதை ஏன் 2004ஆம் ஆண்டு தேர்தலின் போது குறிப்பிடாமல் மறைத்தார் இரானி? என்பது எதிர்க்கட்சிகளின் முதன்மைக் கேள்வியாக உருவெடுத்துள்ளது.