ராஜ்யசபாவில் ஜி.எஸ்.டி மசோதா நிறைவேற்றம்.. திமுக ஆதரவு, அதிமுக வெளிநடப்பு!
டெல்லி: சரக்கு மற்றும் சேவை மசோதா ராஜ்யசபாவில் ஒரு மனதாக நிறைவேறிய நிலையில், அந்த மசோதாவுக்கு திமுக ஆதரவும், அதிமுக எதிர்ப்பும் தெரிவித்தது.
அதிமுக எதிர்ப்பு தெரிவித்ததோடு, வாக்களிப்பு நடைபெற்றபோது, அவையில் இருந்து வெளிநடப்பும் செய்தது.

லோக்சபாவில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட ஜிஎஸ்டி மசோதாவை, ராஜ்யசபாவில் இன்று நிதி அமைச்சர் அருண் ஜேட்லி அறிமுகம் செய்து பேசினார்.
இந்த மசோதா மீது முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், அதிமுகவின் நவநீதகிருஷ்ணன் உள்ளிட்ட பல கட்சி உறுப்பினர்களும் விவாதம் நடத்தி அரசுக்கு பல சலுகைகளை கொடுத்தனர். இதில் அதிமுக மட்டும், இந்த மசோதாவை எதிர்த்தது. இது கூட்டாட்சிக்கு எதிரானது என்றும், தமிழகத்திற்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்படும் என்றும் அவர் கூறினார்.
திமுக சார்பில் பேசிய டி.கே.எஸ்.இளங்கோவன், மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்தார். சரக்கு மற்றும் சேவை வரி மசோதா குறித்த விவாதத்தின் போது பேசிய டி.கே.எஸ்.இளங்கோவன் எம்பி சில நிபந்தனைகளுடன் ஆதரவு தெரிவிப்பதாக பேசினார். மாநிலங்களின் நிதி ஆதாரத்திற்கு பாதகம் இல்லாத வகையில் ஜி.எஸ்.டி இருப்பது அவசியம். இந்த வரியிலிருந்து புகையிலை பொருட்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என தெரிவித்தார்
தொடர்ந்து 7 மணி நேரம் விவாதம் நடைபெற்றது. இரவு சுமார் 9.30 மணிவரை விவாதம் நடந்த நிலையில், மசோதா வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. இதில் மசோதாவுக்கு ஆதரவாக 203 உறுப்பினர்கள் வாக்களித்தனர். அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். யாரும் எதிர்த்து வாக்களிக்கவில்லை என்பதால் ஜிஎஸ்டி மசோதா ஒரு மனதாக நிறைவேறியதாக அறிவிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications