ராஜ்யசபாவில் ஒரு மனதாக நிறைவேறியது ஜி.எஸ்.டி மசோதா! ஆதரவாக 203 உறுப்பினர்கள் வாக்களிப்பு
டெல்லி: சரக்கு மற்றும் சேவை மசோதா ராஜ்யசபாவில் ஒரு மனதாக நிறைவேறியது. கடந்த 25 வருடத்தில் மத்திய அரசு ஒன்று எடுத்த மிகப்பெரிய பொருளாதார முன்நகர்வாக இது வர்ணிக்கப்படுகிறது. முன்னதாக அதிமுக உறுப்பினர்கள் வாக்கெடுப்பை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.
லோக்சபாவில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட ஜிஎஸ்டி மசோதாவை, ராஜ்யசபாவில் இன்று நிதி அமைச்சர் அருண் ஜேட்லி அறிமுகம் செய்து பேசினார். முன்னதாக காங்கிரஸ் அறிவுறுத்திய சில மாற்றங்களையும் அந்த மசோதாவில் மத்திய அரசு செய்திருந்தது.

இந்த மசோதா மீது முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், அதிமுகவின் நவநீதகிருஷ்ணன் உள்ளிட்ட பல கட்சி உறுப்பினர்களும் விவாதம் நடத்தி அரசுக்கு பல சலுகைகளை கொடுத்தனர். இதில் அதிமுக மட்டும், இந்த மசோதாவை எதிர்த்தது. திமுக சார்பில் பேசிய டி.கே.எஸ்.இளங்கோவன், மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்தார்.
இரவு சுமார் 9.30 மணிவரை விவாதம் நடந்த நிலையில், மசோதா வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. இதில் மசோதாவுக்கு ஆதரவாக 203 உறுப்பினர்கள் வாக்களித்தனர். அதிமுக வெளிநடப்பு செய்தது. எனவே யாரும் எதிர்த்து வாக்களிக்கவில்லை என்பதால் ஜிஎஸ்டி மசோதா ஒரு மனதாக நிறைவேறியதாக அவை தலைவர் அறிவித்தார்.
ஜிஎஸ்டி சட்டத்தை அமல்படுத்த, அரசியல் சாசன பிரிவு 122ல் திருத்தம் செய்ய வேண்டியிருந்தது. எனவே ராஜ்யசபாவில் 3ல் 2 பங்கு உறுப்பினர் ஆதரவு ஆளும் கட்சிக்கு தேவைப்பட்டது. தற்போது அந்த ஆதரவு கிடைத்ததால் சட்டம் நிறைவேறியது.
ஜிஎஸ்டி சட்டம் ராஜ்யசபாவில் நிறைவேறியுள்ள நிலையில், அதில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களுக்கு லோக்சபாவில் ஒப்புதல் பெறப்பட்டு, குடியரசு தலைவரிடம் அனுப்பி வைக்கப்பட்டு அவரின் ஒப்புதல் பெறப்படும். பிறகு இந்த சட்டம் அமலுக்கு வரும். முன்னதாக, நாட்டிலுள்ள மொத்த மாநிலங்களில் குறைந்தபட்சம் பாதி மாநில சட்டசபையிலாவது இந்த சட்ட திருத்தத்திற்கு ஒப்புதல் கிடைக்க வேண்டியதும் அவசியம்.












Click it and Unblock the Notifications