குஜராத் இடைத்தேர்தல்: பாஜகவை ஜெயிக்க விடுவோமா? 200 வேலையில்லா பட்டதாரிகள் திடீர் வேட்பு மனு தாக்கல்
அகமதாபாத்: குஜராத் இடைத்தேர்தலில் ஆளும் பாஜக அரசு மீது அதிருப்தி தெரிவித்து 200க்கும் மேற்பட்ட வேலையில்லா பட்டதாரிகள் இடைத்தேர்தல்களில் வேட்புமனுத் தாக்கல் செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலத்தில் 8 சட்டசபை தொகுதிகளுக்கு நவம்பர் 3-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இம்மாநிலத்தில் பாஜக- காங்கிரஸ் இடையேயாதான் வழக்கம் போல போட்டி இருந்து வருகிறது.

200க்கும் மேற்பட்டோர் மனு தாக்கல்
இந்த முறை வேலையில்லா பட்டதாரிகள் பெரும் எண்ணிக்கையில் தேர்தல் களத்தில் குதித்துள்ளனர். குறைந்த பட்சம் 4 தொகுதிகளிலாவது பாஜகவை வீழ்த்த வேண்டும் என்பதற்காக 200க்கும் மேற்பட்ட இளைஞர்கள் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர்.

டெபாசிட்டுக்கு நிதி வசூலிப்பு
Sikshit Yuva Berozgar Samiti என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ள படித்த வேலையில்லா பட்டதாரிகள் கமிட்டிதான் இப்போது தேர்தல் களத்தில் குதித்திருக்கிறது. வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கான டெபாசிட் கட்டணத்தை பொதுமக்களிடம் வீதி வீதியாக சென்று வசூலித்தனர் இளைஞர்கள்.

பாஜகவை எதிர்ப்போம்
இது தொடர்பாக அந்த அமைப்பின் ஆதரவாளர்கள் கூறுகையில், குஜராத் அரசு பணிக்கு தேர்வு எழுதி பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் காத்திருக்கிறோம். ஆனால் ஐந்து ஆண்டுகள் ஓடிவிட்டன. இன்னமும் அரசு வேலைவாய்ப்பு எதுவும் வழங்கவில்லை. இதனால் வீடு வீடாக சென்று மாநில பாஜக அரசுக்கு எதிராக பிரசாரம் செய்வோம்.

பாஜகவுக்கு பாடம் புகட்டுவோம்
எங்களது பிரசாரத்தால் காங்கிரஸ் கட்சி ஆதாயம் அடைந்தாலும் பரவாயில்லை. இந்த பாஜக அரசுக்கு சரியான பாடம் புகட்டுவதுதான் எங்களது நோக்கம். எங்களது போராட்டங்களை ஒடுக்கியதும் இந்த பாஜக அரசுதான். எங்கள் மீது எண்ணற்ற வழக்குகளையும் மாநில பாஜக அரசுதான் தொடர்ந்துள்ளது என்கின்றனர்.












Click it and Unblock the Notifications