கலவர வழக்கு.. பாஜக எம்எல்ஏ ஜடேஜாவை காக்க குஜராத் அரசு முயற்சி! ஓபனாக விமர்சித்த உயர்நீதிமன்ற நீதிபதி
காந்திநகர்: கலவர வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பாஜக எம்.எல்.ஏ. ஜடேஜாவை குஜராத் அரசு பாதுகாக்க முயற்சிப்பதாக அம்மாநில உயர்நீதிமன்றம் விமர்சித்து உள்ளது.
கடந்த 2007 ஆம் ஆண்டு டிசம்பர் 1 ஆம் தேதி குஜராத் மாநிலம் கம்பாலியாவில் செயல்பட்டு வந்த எஸ்ஸார் நிறுவனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சுமார் 300 க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தனியார் நிறுவனத்தால் விவசாயிகள், பொதுமக்கள் பாதிக்கப்படுவதாக கூறி நிறுவனத்திற்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்ட கும்பல் கற்களை வீசி தாக்குதல் நடத்தியது.
குஜராத் தேர்தல்.. மோர்பி பால விபத்தால் எம்எல்ஏவுக்கு கல்தா.. மீட்பு பணி செய்தவருக்கு பாஜகவில் சீட்
ஊழியர்கள் போலீசார் படுகாயம்
குறிப்பாக நிறுவன ஊழியர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் கடுமையாக தாக்கப்பட்டன. இதில் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த ஊழியர்கள் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசாரும் இந்த தாக்குதலில் காயமடைந்தனர்.
46 பேர் மீது வழக்கு
நிறுவனத்தின் பேருந்துகளும் கடுமையாக சேதமடைந்தன. இந்த கலவரம் தொடர்பாக 46 பேர் மீது சட்டவிரோதமாக ஒன்றுகூடுதல், கலவரம் செய்தல், பயங்கர ஆயுதங்களை கொண்டு தாக்குதல், அரசு ஊழியரை தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் குஜராத் போலீஸ் வழக்குப்பதிவு செய்தது.
பாஜக எம்.எல்.ஏ.
வழக்கு பதிவு செய்யப்பட்ட 46 பேரில் தர்மேந்திரா எனப்படும் ஹகுபா ஜடேஜாவும் ஒருவர். இவர் தற்போது பாஜக சட்டமன்ற உறுப்பினரான உள்ளார். இவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட அனைவர் மீதான குற்றச்சாட்டுகளை திரும்பப்பெற குஜராத் அரசு வழக்கறிஞர் மாவட்ட நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
உயர்நீதிமன்றத்தில் வழக்கு
இதனை நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், அதை எதிர்த்து டிசம்பர் மாதம் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவும் ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் புதிதாக நியமிக்கப்பட்ட குஜராத் அரசின் சிறப்பு வழக்கறிஞர் கமலேஷ்குமார் தவே, பாஜக எம்.எல்.ஏ. ஜடேஜா மீதான வழக்கை ரத்து செய்திடக் கோரி குஜராத் உயர்நீதிமன்றத்தில் புதிய வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார்.
நீதிபதி கடும் விமர்சனம்
இந்த வழக்கு குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதி நிரல் மேத்தா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, குஜராத் அரசு சிறப்பு வழக்கறிஞர் கமலேஷ்குமாரையும், குஜராத் அரசையும் கடுமையான வார்த்தைகளால் நீதிபதி விமர்சித்தார். சிறப்பு அரசு வழக்கறிஞர் மாநில அரசின் பொம்மை என நீதிமன்றம் விமர்சித்து உள்ளது.
தபால்காரர்
அரசு சிறப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தின் மீது தனக்கு இருக்கும் கடமையை உணராமல் தனக்கு மேல் இருப்பவர்களை திருப்திபடுத்துவதற்காகவே செயல்படுகிறார். அரசு சிறப்பு வழக்கறிஞர் அரசாங்கத்தின் அறிவுரைகளின்படி மட்டுமே செயல்பட்டு தபால்காரராக மாறி இருக்கிறார் என்பது சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டு உள்ளது.
சிறப்பு சலுகை இல்லை
எத்தகைய சூழலிலும் மாநில அரசு தங்கள் எம்.எல்.ஏவை பாதுகாக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதாக நீதிமன்றம் உறுதியாக நம்புகிறது. குற்றம்சாட்டப்பட்டவர் தற்போது சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார் என்ற காரணத்துக்காக அவருக்கு எந்தவிதமான சிறப்பு சலுகையையும் அறிவிக்க முடியாது. சாதாரண குடிமக்களை விட பாஜக எம்.எல்.ஏவுக்கு எந்த சிறப்பு உரிமை தரப்படாது.
அரசியல் தலைவர்
குற்றம்சாட்டப்பட்ட நபர் ஒரு அரசியல் தலைவர் என்பதற்காக, பொதுநலன் பற்றி கவலைப்படாமல் அவர் மீதான வழக்குகளை திரும்பப்பெறுவதற்கான மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. குற்றம்சாட்டப்பட்டவர் அரசியல் தலைவராக இல்லாமல் இருந்தால், வழக்கை திரும்பப்பெறுவதற்கான விண்ணப்பம் தாக்கல் செய்யப்பட்டு இருக்காது.
தள்ளுபடி
இந்த மனுக்கள் அரசியல் நலனுக்காக தொடுக்கப்பட்டதாக தெரிகிறது. சட்ட நடைமுறைகளை முறியடிப்பதற்காக முயற்சி இது." என்றி கூறிய நீதிபதி நிரல் மேத்தா, பாஜக எம்.எல்.ஏ. மீதான வழக்குகளை வாபஸ் பெறுமாறும் தொடர்ப்பட்ட மனுவை தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டார்.