‛நீட்’ தேர்வில் பெரிய முறைகேடு.. தேர்வு முடிந்த பிறகு விடை எழுத கைமாறிய பணம்.. அதிர வைத்த குஜராத்!
காந்தி நகர்: கடந்த 5ம் தேதி நடந்த நீட் தேர்வில் குஜராத் மாநிலத்தில் மிகப்பெரிய முறைகேடு நடந்துள்ளது. நீட் தேர்வு முடிந்த பிறகு சரியான விடை எழுதி கொடுக்க லட்சக்கணக்கில் பணம் கைமாறியது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.
நம் நாட்டில் மருத்துவ படிப்பை படிக்க நீட் (NEET) தகுதி தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. நீட் தேர்வுக்கு தமிழகத்தில் எதிர்ப்பு உள்ளது. தமிழகத்துக்கு நீட் தேர்வில் விலக்கு அளிக்கும்படி தொடர்ந்து திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இதற்கிடையே தான் இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு கடந்த 5ம் தேதி நாடு முழுவதும் 557 நகரங்களில் அமைக்கப்பட்டுள்ள 4,751 தேர்வு மையங்களில் நடந்தது. அன்றைய தினம் மதியம் 2 மணிக்கு தொடங்கிய நீட் தேர்வு மாலை 5.20 மணி வரை நடந்தது. மொத்தம் 13 மொழிகளில் நீட் தேர்வு நடந்தது. தமிழ்நாட்டில் மட்டும் 1.55 லட்சம் பேர் நீட் தேர்வு எழுதினர். நாடு முழுவதும் 24 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் நீட் தேர்வு எழுதினர்.
இந்நிலையில் தான் குஜராத் மாநிலத்தில் நடந்த நீட் தேர்வில் பெரிய முறைகேடு நடந்துள்ளது தெரியவந்துள்ளது. இந்த முறைகேடு என்பது குஜராத் மாநிலம் பன்ச் மகால் மாவட்டம் கோத்ராவில் உள்ள தேர்வு மையத்தில் நடந்துள்ளது. அதாவது இந்த தேர்வு மையத்தில் ஜெய் ஜலராம் பகுதியில் உள்ள பள்ளியை சேர்ந்த இயற்பியல் ஆசிரியர் துஷார் பட், தேர்வு மையத்தின் துணை சூப்பிரண்டாக பணியில் இருந்தார்.
அப்போது சில மாணவர்களுக்கு துஷார் பட் உதவி செய்வதாக கூறியுள்ளார். அதாவது அவர் பணியில் உள்ள தேர்வு மையத்தில் நீட் எழுதிய 6 மாணவர்களிடம், ‛‛நீட் தேர்வில் விடை தெரியாவிட்டால் அதனை எழுதாமல் விட்டு விடுங்கள். தேர்வு முடிந்த பிறகு உங்களின் விடைத்தாளில் சரியான விடைகள் எழுதி தரப்படும்'' எனக்கூறி ரூ.10 கோடி பேரம் பேசியுள்ளார். இதற்கு 6 மாணவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். அதில் ஒருவர் சார்பில் ரூ.7 லட்சம் முன்பணமாக வழங்கப்பட்டுள்ளது. இந்த பணத்தை துஷார் பட் வாங்கி தனது காரில் வைத்துள்ளார்.
இதற்கிடையே தான் துஷார் பட் முறைகேட்டில் ஈடுபடுவது பற்றி மாவட்ட நிர்வாகத்துக்கு புகார் சென்றது. இந்த புகாரை தொடர்ந்து கூடுதல் கலெக்டர் மற்றும் மாவட்ட கல்வித்துறை அதிகாரி ஆகியோர் துஷார் பட்டை பிடித்து விசாரித்தனர். மேலும் அவரது செல்போன் சோதிக்கப்பட்டது. அப்போது அந்த மையத்தில் தேர்வு எழுதிய 16 மாணவர்களின் தேர்வு எண், அவர்களின் பெயர் விபரங்கள் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து அவரிடம் இருந்த ரூ.7 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் சம்பவம் குறித்து கோத்ரா தாலுகா போலீசில் புகாரளிக்கப்பட்டது. இந்த புகாரை தொடர்ந்து கோத்ரா தாலுகா போலீசார் துஷார் பட், பரசுராம் ராய் ஆரீப் வோரா ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் ஆரீப் வோரா தான் முதற்கட்டமாக ஒரு மாணவர் சார்பில் ரூ.7 லட்சத்தை துஷார் பட்டிடம் வழங்கியது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications