கடும் வெயிலுக்கு பிரேக்.. பெங்களூரில் புழுதி புயலுடன் திடீர் ஆலங்கட்டி மழை.. மக்கள் குஷி
பெங்களூர்: பெங்களூரின் சில இடங்களில் இன்று மாலை புழுதி புயலுடன், புழுதி காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது.
குளுகுளு நகரம் என பெயர் பெற்ற கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரில் மார்ச் மாதம் முதல் கடும் வெயில் வாட்டி வருகிறது. அதிகபட்ச வெப்ப நிலை 33 டிகிரி செல்சியசை ஒட்டியுள்ளது. இதனால் நகர மக்கள் வெப்பத்தால் அவதிப்பட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில், இன்று மாலை பெங்களூரின் வடகிழக்கு, கிழக்கு மற்றும் தென் கிழக்கு பகுதிகளில் கரு மேக கூட்டங்கள் திரண்டு மழை பெய்ய தொடங்கியது. ஒயிட்பீல்டு, ஹூடி, பையப்பனஹள்ளி, ராமமூர்த்தி நகர் உள்ளிட்ட நகரின் கிழக்கு புறநகர் பகுதிகளில் நல்ல மழை பெய்தது. அங்கு சில இடங்களில் ஆலங்கட்டி மழை பெய்துள்ளது.
ஒயிட்பீல்டு பகுதியில் பெய்த ஆலங்கட்டி மழையை கையில் எடுத்து வைத்து மக்கள் போட்டோக்களை சோஷியல் மீடியாக்களில் ஷேர் செய்து வருகிறார்கள். பிற பகுதிகளிலும் மாலை நிலவரப்படி காற்றுடன் தூரல் மழை பெய்தது. வட பெங்களூர் பகுதியில் புழுதி புயல் வீசியுள்ளது. மணிக்கு 50 கி.மீ வேகத்தில் புழுதி புயல் வீசியதாக தனியார் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவிக்கிறது.
Hailstorm in #Bengaluru pic.twitter.com/Sd0whcm7y4
— Adarsh SB (@AdarshSB) March 30, 2018
கடும் வெப்பம் வாட்டி வந்த நிலையில், திடீர் என மழை பெய்துள்ளது பெங்களூர் நகரவாசிகளை குஷிப்படுத்தியுள்ளது.