தெலுங்கானா உதயமாகி ஓராண்டு நிறைவு- உற்சாக கொண்டாட்டம்!
ஹைதராபாத்: ஆந்திரப் பிரதேசத்தில் இருந்து பிரிந்து தெலுங்கானா தனி மாநிலமாக அந்தஸ்து பெற்று ஓராண்டு நிறைவு பெறுகிறது. இதையொட்டி நாளை முதல் ஒரு வாரம் "மாநில நிறுவன நாள்" கொண்டாட்டங்கள் கோலாகலமாக நடத்த மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தில் இருந்து தெலுங்கானா பகுதியை பிரித்து தனி மாநிலமாக கடந்த ஆண்டு ஜூன் 2-ந் தேதி உருவாக்கப்பட்டது.
இருப்பினும் இரு மாநிலங்களுக்கும் பொதுவான தலைநகரம், பொதுவான, உயர் நீதிமன்றம், பொதுவான ஆளுநர், பொதுவான பொதுத்தேர்வு முறை ஆகியவற்றை கடந்த ஓராண்டாக அம்மாநில மக்கள் வலியுறுத்திவந்தனர். இரு மாநிலங்களுக்கும் இடையே பல்வேறு சர்ச்சைகள் இருந்தபோதும் இரு மாநிலங்களும் சேர்ந்து சில கொள்கை முடிவுகளை எடுத்து செயல்படுத்த கவனம் செலுத்தி வருகிறது.
இதனிடையே இன்று தெலுங்கானா மாநில நிறுவன நாள் முதலாம் ஆண்டை முன்னிட்டு ஹைதராபாத்தில் உள்ள பூங்காவில் மாநில போராட்டத்தில் உயிர் நீத்தவர்களுக்கு மலர் தூவி முதல் மரியாதை செலுத்தப்பட்டது.
மேலும் இந்த மாநில நிறுவன நாள் துவக்க விழாவுக்கு செகந்தராபாத் மைதானத்தில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த மைதானத்தில் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து உயர் போலீஸ் அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர்.