வாக்கு பதிவு எந்திரத்தில் கோளாறு செய்து வெற்றி பெற்ற பாஜகவிற்கு வாழ்த்துகள்.. ஹர்திக் நக்கல்!
வாக்களிக்கும் எந்திரத்தில் நிறைய கோளாறு செய்து பாஜக கட்சி வெற்றி பெற்று இருப்பதாக ஹர்திக் பட்டேல் குறிப்பிட்டு இருக்கிறார்.
அஹமதாபாத்: குஜராத் தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில் பாஜகவின் வெற்றி குறித்து ஹர்திக் பட்டேல் பேசியிருக்கிறார். வாக்களிக்கும் எந்திரத்தில் நிறைய கோளாறு செய்து பாஜக கட்சி வெற்றி பெற்று இருப்பதாக ஹர்திக் பட்டேல் குறிப்பிட்டு இருக்கிறார்.
குஜராத்தில் தற்போது சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இது வரை எண்ணப்பட்ட வாக்குகளில் பாஜக கட்சியே முன்னிலை வகிக்கிறது. இதுவரை பாஜக 93 தொகுதிகளில் வெற்றி பெற்று இருக்கிறது. காங்கிரஸ் 76 தொகுதிகளில் வென்று உள்ளது.
தற்போது பாஜகவின் இமாலய வெற்றி குறித்து ஹர்திக் பட்டேல் பத்திரிக்கையாளர்களிடம் பேசி உள்ளார். ''ஜப்பான் போன்ற தொழில்நுட்பத்தில் வளர்ந்த நாடுகள் கூட வாக்களிக்க எந்திரம் உபயோகிப்பதில்லை. இந்தியா மட்டும் ஏன் வாக்களிக்கும் எந்திரத்தை பயன்படுத்த வேண்டும்.'' என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
மேலும் ''வாக்களிக்கும் எந்திரத்தில் எளிதாக கோளாறு செய்ய முடியும். யார் நினைத்தாலும் அதை ஹேக் செய்ய முடியும். சூரத், ராஜ்கோட், அஹமதாபாத் தொகுதிகளில் இதுபோன்ற குளறுபடிகள் நடந்து இருக்கிறது. ஆனாலும் கூட பெரிய அளவு வித்தியாசத்தில் அவர்கள் வெற்றிபெறவில்லை'' என்று குறிப்பிட்டார்.
அதேபோல் ''காங்கிரஸ் மற்றும் அனைத்து எதிர்க்கட்சிகளும் உடனடியாக வாக்களிக்கும் எந்திரத்திற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும். வாக்களிக்கு எந்திரத்தின் உதவியுடன் வெற்றிபெற்ற பாஜக கட்சிக்கு என் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டார்.