ஹரியானாவில் ஜாட் சமூகத்தினர் சிறை நிரப்பும் போராட்டம்: ஜிந்த் பகுதியில் 144 தடை
சன்டிகர்: ஹரியானா மாநிலத்தில் ஜாட் சமூகத்தினர் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்ததையடுத்து அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஹரியானா மாநிலத்தில் ஜாட் சமூகத்தினர் தங்களுக்கு இட ஒதுக்கீடு கோரி கடந்த பிப்ரவரி மாதம் போராட்டம் நடத்தினர். அந்த போராட்டங்களின்போது கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கக் கோரி இன்று முதல் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப் போவதாக ஜாட் சமூகத்தினர் அறிவிப்பு வெளியிட்டனர்.
இதையடுத்து ஜிந்த் முன்சிபாலிட்டி பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட மாஜிஸ்திரேட் வினய் சிங் கூறுகையில்,
சிறை நிரப்பும் போராட்டத்தின்போது அசம்பாவிதங்கள் எதுவும் நடக்காமல் இருக்க ஜிந்த் முனிசிபாலிட்டி பகுதியில் இரண்டு நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் அப்பகுதியில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்றார்.
இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் நடந்த போராட்டத்தை நடத்திய அகில பாரதிய ஜாட் ஆரக்ஷன் சங்கர்ஷ் சமிதி அமைப்பு ஜாட் யுவ ஏக்தா மஞ்ச் நடத்தும் சிறை நிரப்பும் போராட்டத்திற்கு ஆதரவு அளித்துள்ளது.
பிப்ரவரி மாதம் நடந்த போராட்டத்தையடுத்து அப்பாவி இளைஞர்களை போலீசார் கைது செய்து வருவதாகவும் அதனால் தான் சிறை நிரப்பும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் அகில பாரதிய ஜாட் ஆரக்ஷன் சங்கர்ஷ் சமிதி அமைப்பு தெரிவித்துள்ளது.