நேஷனல் ஹெரால்டு வழக்கு - சோனியா, ராகுலின் சம்மன் மீதான தடை நீட்டிப்பு
டெல்லி: காங்கிரஸ் கட்சித் தலைவரான சோனியா காந்தி மற்றும் அவருடைய மகனான காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி மேல் தொடுக்கப்பட்டுள்ள வழக்கில் உயர்நீதிமன்றம் சம்மன் மீதான தடையினை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.
"நேஷனல் ஹெரால்டு" பத்திரிகையின் சொத்துக்களை அபகரித்ததாக கூறி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத்தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் மீது சுப்பிரமணிய சுவாமி, வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் சோனியா, ராகுல் உள்ளிட்டோருக்கு கடந்த ஜூன் மாதம் 26 ஆம் தேதி சம்மன் அனுப்பிய நீதிமன்றம், அனைவரும் ஆகஸ்ட் 7 ஆம் தேதி ஆஜராகுமாறு கூறியிருந்தது.
இந்த சம்மனை எதிர்த்து சோனியா, ராகுல், காங்கிரஸ் பொருளாளர் மோதிலால் வோரா, பொதுச்செயலாளர் ஆஸ்கர் பெர்னாண்டஸ் மற்றும் சுமன் துபே ஆகியோர் டெல்லி ஹைகோர்ட்டில் மேல் முறையீடு செய்தனர். இதை ஏற்றுக்கொண்ட ஹைகோர்ட்டு, இந்த 5 பேருக்கும் அனுப்பப்பட்ட சம்மனுக்கு இடைக்கால தடை விதித்து ஆகஸ்ட் 6 ஆம் தேதி உத்தரவிட்டது.
இந்த நிலையில் இந்த மேல் முறையீட்டு வழக்கு நேற்று ஹைகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது சோனியா, ராகுல் ஆகியோரின் வக்கீல்கள் ஆஜராகி இந்த வழக்கை ஒத்தி வைக்குமாறு வேண்டினர்.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி வி.பி.வைஷ், சோனியா, ராகுல் உள்ளிட்ட 5 பேரின் சம்மனுக்கு எதிரான தடையை, மேல் முறையீட்டு மனு மீதான இறுதி தீர்வு வரை நீட்டித்து உத்தரவிட்டார். எனினும் அவர்களின் மேல் முறையீட்டு மனு மீது அடுத்த ஆண்டு ஜனவரி 12 ஆம் தேதி முதல் தினந்தோறும் விசாரணை நடத்தப்படும் என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் கூறினார்.
ஆனால் மனுதாரர்களின் இந்த நடவடிக்கைக்கு சுப்பிரமணிய சுவாமி எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். இது குறித்து கூறிய அவர், "இந்த வழக்கில் அடுத்த விசாரணையில் இருந்து சோனியா, ராகுல் உள்ளிட்டோருக்கு எந்த வித விலக்கும் அளிக்கக்கூடாது" என்று தெரிவித்தார்.
இதற்கிடையே இந்த வழக்கில் சேர்க்கப்பட்டிருந்த பிட்ரோடா, தனது சம்மனுக்கு எதிராக ஹைகோர்ட்டில் இதுவரை மேல்முறையீடு எதுவும் செய்யாததால், அவருக்கு கடந்த 9 ஆம் தேதி மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.