பேய் மழை என்பார்களே அது இதுதான்... பயந்து போய் ஓரம்கட்டிய வாகனங்கள்!
திண்டிவனம்: வானம் பொத்துக் கொண்டு ஊற்றுகிறதோ என்று சந்தேகப்படும் அளவுக்கு நேற்று இரவு தொடங்கி, அதிகாலை வரை சேலத்திலிருந்து தாம்பரம் வரை மழை கொட்டித் தீர்த்தது.
சமீப ஆண்டுகளில் எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு மட்டும் பெரும் மழை பெய்து வருகிறது. ஆறுகள், ஏரி, குளங்களுக்கு மழை வெள்ளம் போய்ச் சேர வடிகால் வசதி இல்லாததால், இந்த மழை வெள்ளம் பெருமளவு கடலில் கலந்து வருகிறது.

ஏரிகளாக, வாய்க்கால்களாக இருந்த இடங்களில் பலவற்றை அரசே தனியார் தொழிற்சாலைகளுக்கும், குடியிருப்புகளுக்கும் தாரைவார்த்ததால் இன்று அங்கு தேங்க வேண்டிய மழை வெள்ளம் வீடுகளைச் சூழ்ந்து நிற்கிறது.
கடந்த வாரம் பெய்த பெரும் மழையின் பாதிப்பிலிருந்தே மக்கள் இன்னும் மீளாத நிலையில், நேற்று முதல் மீண்டும் மழை கொட்டத் தொடங்கியது. தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்காலில் இடைவிடாது மழை கொட்டியது.
சேலம், வேலூர் போன்ற மாவட்டங்களிலும் கனமழை பெய்து கொண்டுள்ளது.
திருச்சி - சென்னை நெடுஞ்சாலையின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெரும் வேகத்தில் பெய்ததால் பயந்துபோன லாரி, ட்ரக் போன்ற கனரக வாகன ஓட்டிகள், அவற்றை சாலையின் ஓரங்களில் வரிசையாக நிறுத்திவிட்டனர்.
இந்த மாதிரி மழை நேரத்தில் கனரக வாகனங்கள் நெடுஞ்சாலைகளில் சிக்கிக் கொள்வதால், 12 மணி நேரம் வரை வாகனப் போக்குவரத்து தடைப்பட்டது கடந்த வார மழையில். எனவே முன்னெச்சரிக்கையாக வாகனங்களை நிறுத்திவிட்டனர்.
தேசிய நெடுஞ்சாலையின் பல இடங்களில் மழை நீர் ஆறாக ஓடிக் கொண்டிருந்ததால், சொற்ப வாகனங்கள் மெதுவாகவே ஊர்ந்து சென்றன.
இன்றும் நாளையும் கூட மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications