அசாமில் வரலாறு காணாத வெள்ளம்... 29 மாவட்டங்கள் கடும் சேதம் - 7.17 லட்சம் பேர் பாதிப்பு
அசாமில் பெய்து வரும் தொடர்மழையால் பிரம்மபுத்திராவில் வரலாறு காணாத அளவிற்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
குவஹாத்தி: அசாமில் பெய்து வரும் தொடர் கனமழையால் அனைத்து ஆறுகளிலும் கடுமையான வெள்ள பெருக்கு ஏற்பட்டு உள்ளது. கடும் வெள்ளத்திற்கு 29 மாவட்டங்களை சேர்ந்த 7 லட்சத்து 17 ஆயிரத்து 46 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். வெள்ளம் மற்றும் நில சரிவுக்கு 9 பேர் உயிரிழந்து உள்ளனர். 1,413 கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன.
Recommended Video
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாமில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக சாசர், கரிம்கஞ்ச், நாகோன், திமா கசாவோ உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கடுமையான மழை கொட்டி வருகிறது. ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது.
நகாவன் மாவட்டம் அதிகம் பாதிப்பிற்கு இலக்காகி உள்ளது. 2.88 லட்சம் பேர் வெள்ள பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். கச்சார் மாவட்டத்தில் 1.2 லட்சம் பேரும், ஹொஜய் மாவட்டத்தில் 1.07 லட்சம் பேரும் பாதிப்படைந்து உள்ளனர். அசாமின் கொபிலி ஆற்றில் அபாய அளவை கடந்து வெள்ளநீர் ஓடுகிறது.
பிரம்மபுத்திரா ஆற்றிலும் அபாய அளவை கடந்து வெள்ளநீர் ஓடுகிறது. இந்த வெள்ள பெருக்கால் கச்சார், திமஜி, ஹொஜய், கர்பி அங்லோங் மேற்கு, நகாவன் மற்றும் கம்ரூப் மெட்ரோ ஆகிய 6 மாவட்டங்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு உள்ளன. தொடர் மழையால் தீம ஹசாவோ மாவட்டத்தின் 12 கிராமங்களில் நில சரிவுகள் ஏற்பட்டு உள்ளன. இதனை தொடர்ந்து, 55 நிவாரண முகாம்கள் மற்றும் 12 வினியோக மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. அவற்றில் 32 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
கொட்டித்தீர்த்த கனமழையால் மதுரையில் குளமான சாலைகள் - சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு
200க்கும் அதிகமான வீடுகள் வெள்ளத்தின் பிடியில் சிக்கி பாதிக்கப்பட்டு உள்ளன. ஹொஜய், லகீம்பூர் மற்றும் நகாவன் மாவட்டங்களில் பல்வேறு சாலைகள், பாலங்கள் மற்றும் நீர்ப்பாசன கால்வாய்கள் வெள்ள நீரால் பாதிக்கப்பட்டு உள்ளன. பெரிய அளவிலான நிலச்சரிவுகள் மற்றும் தேங்கிய நீர் ஆகியவற்றால் ரயில்வே தண்டவாளங்கள், பாலங்கள் மற்றும் சாலை போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
ஜதிங்கா-ஹரங்கஜாவோ மற்றும் மகுர்-பைடிங் ரயில்வே பாதை நிலச்சரிவால் துண்டிக்கப்பட்டுள்ளன. தலைநகர் கவுகாத்தியின் புறநகர் பகுதிகளிலும் பல இடங்களில் வெள்ளம் தேங்கியுள்ளதாக கூறப்படுகிறது. ஹோஜாய் மற்றும் கச்சார் மாவட்டங்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வெள்ளம் பாதித்த மக்களை மீட்கும் பணியில் ராணுவம், துணை ராணுவ படைகள், அசாம் பேரிடர் மீட்பு படை, தீயணைப்பு மற்றும் அவசரகால சேவை துறையை சேர்ந்தவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். நிவாரண பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நியூ கஞ்ஜங், பியாங்புய், மவுல்ஹோய், நம்ஜேஉராங், தெற்கு பகிதர், மகாதேவ் தில்லா, காளிபாரி, வடக்கு பகிதர், ஜியான் மற்றும் லோடி பங்மவுல் கிராமங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டு உள்ளன. நிலச்சரிவுகளால் ஜதிங்கா-ஹரங்காஜாவோ மற்றும் மஹூர்-பியாதிங் பகுதிகளில் ரயில் சேவை பாதிக்கப்பட்டு உள்ளது.
ஆண்டுதோறும் பெய்யும் கனமழையால், அசாம் மாநிலம் கொஞ்சம் கொஞ்சமாக ஆற்றுக்குள் அரித்துச் செல்லப்படுகிறது.