சபரிமலை: கொட்டும்மழை நனைந்து கொண்டே ஐயப்பனை தரிசித்த பக்தர்கள்
சபரிமலை: சபரிமலையில் கொட்டிவரும் கனமழையால் லட்சக்கணக்கான பக்தர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். விடிய விடிய கொட்டும் மழையில் நனைந்து கொண்டே அவர்கள் ஐயப்பனை தரிசனம் செய்தனர்.
வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை தென்மேற்கு திசையில் நகர்ந்து குமரி கடல் பகுதியில் மையம் கொண்டுள்ளது. இதனால் தென் கேரள பகுதிகளிலும் மழை பெய்கிறது.
திருவனந்தபுரம், பத்தினம் திட்டா மாவட்டங்களில் பெய்த மழை சபரிமலையிலும் கொட்டி தீர்த்தது. நேற்று முன்தினம் பகலில் தொடங்கிய மழை விடிய விடிய பெய்தது. நேற்று இரவிலும் மழை நீடித்தது.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜைக்கு இருமுடி கட்டி செல்லும் பக்தர்கள் இதனால் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். சபரிமலை, நிலக்கல், சன்னிதானத்திலும் மழை தொடர்ந்து பெய்ததால் பக்தர்கள் மலை ஏற சிரமப்பட்டனர்.
மழை காரணமாக பம்பை ஆற்றிலும் வெள்ளம் கரை புரண்டு ஓடியது. இதனால் பக்தர்கள் பாதுகாப்பாக குளிக்க வேண்டும் என கோவில் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்தது.
ஆற்றங்கரையோரங்களில் பாதுகாப்புக்காக நீச்சல் வீரர்கள் கண்காணிப்பில் ஈடுபட்டனர். மழை காரணமாக சன்னிதானத்தில் கூட்டம் குறைவாகவே இருந்தது.
கோவிலுக்கு வரும் பக்தர்கள் வாகனங்களை நிலக்கல் பகுதியிலேயே நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நேற்று பெய்த தொடர் மழை காரணமாக இங்கு கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.
தென்கேரள பகுதியில் பெய்து வரும் மழை இன்னும் 2 நாட்களுக்கு நீடிக்கும் என வானிலை இலாகா தெரிவித்துள்ளது.எனவே சபரிமலை கோவில் நிர்வாகம் பக்தர்களுக்கு தேவையான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது.