கர்நாடகத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் கனமழை.. ஒகேனக்கல்லில் அதிகரித்த நீர்வரத்து
பிலிகுண்டு: காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. முன்னதாக பருவமழை பொய்த்ததால் கர்நாடக மாநில அணைகளில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடுவது நிறுத்தப்பட்டது.
இதனால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைந்தது. கர்நாடகாவில் மழை பெய்தால் மட்டுமே, தமிழகத்திற்கு தண்ணீர் கிடைக்கும் என கர்நாடக மாநில அமைச்சர் ரேவண்ணா சில நாட்களுக்கு முன்னர் கூறியிருந்தார்.
கர்நாடகாவில் போதுமான தண்ணீர் இல்லை என்றும், மழை இல்லாததால் அங்கு மழை பெய்து எங்கள் அணைக்கு போதுமான நீர் கிடைத்தால் தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கப்படும் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் கர்நாடக மாநிலம் மற்றும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில், இம்மாதம் துவக்கம் முதலே அவப்போது கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதன் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நேற்று மாலை நிலவரப்படி, நீர்வரத்து வினாடிக்கு 800 கனஅடியாக அதிகரித்துள்ளது.
தற்போது அதிமாக வரக்கூடிய நீரை தமிழக மற்றும் கர்நாடக மாநில எல்லையான பிலிகுண்டுலுவில் அதிகாரிகள் அளவிட்டு கண்காணித்து வருகின்றனர்.இரு நாட்களுக்கு முன் டெல்லியில் நடைபெற்ற காவிரி ஆணைய ஒழுங்காற்று கூட்டத்தில், ஜூன் மாதத்தில் திறக்க வேண்டிய 9 டிஎம்சி நீரை திறக்க கர்நாடகத்தை தமிழகம் கேட்டுக் கொண்டது
எம்.பி. ஆகிறார்கள் வைகோ, அன்புமணி... அதிமுக, திமுகவில் அடுத்தடுத்த திருப்பம்
தற்போது கர்நாடகாவின் பல இடங்களிலும், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் பெய்து வரும் கனமழை காரணமாக தமிழகத்தின் கோரிக்கையை ஏற்று கர்நாடகம் நீரை திறந்து விடுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதனிடையே நீர்வரத்து அதிகரித்து காணப்படுவதால் நேற்று ஒகேனக்கல்லுக்கு வந்த சுற்றுலாப் பயணிகள், மெயின் அருவி, சினி ஃபால்ஸ் மற்றும் காவிரியாற்றில் குளித்து மகிழ்ச்சியடைந்தனர்.