தயவு செய்து என்னை காப்பாத்துங்க: சவுதியில் சிக்கித் தவிக்கும் இந்தியர் வீடியோ மூலம் கண்ணீர் கோரிக்கை
டெல்லி: சவுதி அரேபியாவில் வேலை செய்யும் கர்நாடகாவை சேர்ந்த அப்துல் சத்தார் மகந்தார் தன்னை இந்தியாவுக்கு அழைத்து வர உதவுமாறு சமூக ஆர்வலர் ஒருவருக்கு வீடியோ மூலம் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.
கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் அப்துல் சத்தார் மகந்தார். அவர் சவுதி அரேபியாவில் உள்ள அல் சுரூர் யுனைடெட் குரூப் நிறுவனத்தில் டிரைவராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அவர் யூடியூப்பில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கடந்த 14ம் தேதி வெளியிடப்பட்டுள்ள அந்த வீடியோவில் அவர் கண்ணீர் மல்க கூறியிருப்பதாவது,
சமூக ஆர்வலர் குந்தன் ஸ்ரீவாஸ்தவ்ஜி தயவு செய்து என்னை காப்பாற்றுங்கள். நான் சவுதியில் டிரைவராக வேலை செய்கிறேன். நான் பணிபுரியும் நிறுவனம் என்னிடம் அதிகமாக வேலை வாங்குகிறதே தவிர சரியாக சம்பளம் தரவில்லை.
சாப்பிடக் கூட காசு தருவது இல்லை. தயவு செய்து என்னை இந்தியாவுக்கு அழைத்து வர உதவி செய்யுங்கள் என்று கேட்டுள்ளார்.