பீகார் மாநிலத்துக்குள் ஊடுருவிய 3 பாகிஸ்தான் தீவிரவாதிகள்.. புகைப்படங்களை வெளியிட்டு தேடுதல் வேட்டை
பாட்னா: பாகிஸ்தானில் இருந்து பீகார் மாநிலத்துக்குள் 3 தீவிரவாதிகள் ஊடுருவி இருப்பதாக உளவுத்துறை அதிர்ச்சி தகவல் வௌியிட்டுள்ளது. அவர்களின் புகைப்படங்களை வெளியிட்டு தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது.
வரும் அக்டோபர் அல்லது நவம்பரில் பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் பீகாரில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பீகார் முழுவதும் வாகன பேரணி நடத்தி வருகிறார்.

இந்நிலையில் நேபாளம் வழியாக பீகாருக்குள் பாகிஸ்தானின் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகள் 3 பேர் ஊடுருவி இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. பாகிஸ்தானின் ராவல் பிண்டியை சேர்ந்த ஹூசைன், உமர்கோட்டை சேர்ந்த அடில், பகவல்பூரை சேர்ந்த உஸ்மான் ஆகியோர் ஆகஸ்ட் முதல் வாரத்தில் பீகாருக்குள் ஊடுருவி உள்ளனர். அவர்கள் நாச வேலைகளில் ஈடுபட திட்டமிட்டு உள்ளனர் என்று உளவுத்துறை எச்சரித்துள்ளது.
உளவுத்துறை அளித்த தகவல்களின் அடிப்படையில் 3 தீவிரவாதிகளின் புகைப்படங்களை பீகார் காவல்துறை வெளியிட்டுள்ளது. அவர்களை கண்டுபிடிக்க மாநிலம் முழுவதும் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்படுகிறது. நேபாள குடியுரிமை அல்லது இந்திய குடியுரிமை ஆதாரங்களை போலியாக உருவாக்கி 3 தீவிரவாதிகளும் பீகார் மாநிலத்துக்குள் நுழைந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தற்போது பீகாரில் வாகன பேரணி நடத்தி வருகிறார். அவர் திறந்தவெளி வாகனத்தில் பேரணி மேற்கொண்டு வருகிறார். தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக ராகுல் காந்தியின் பயண திட்டங்களில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications