டுபாக்கூர் சாமியார் ராம்பாலை இன்னமும் கைது செய்யலையா? ஹரியானா போலீஸ் மீது கோர்ட் காட்டம்!
பர்வாலா: கொலை வழக்கில் சர்ச்சைக்குரிய சாமியார் ராம்பாலை கைது செய்யாததற்கு ஹரியானா போலீசாசாரை பஞ்சாப் மற்றும் ஹரியானா நீதிமன்றம் கடுமையாக சாடியுள்ளது. சாமியார் ராம்பாலை வரும் வெள்ளிக்கிழமைக்குள் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் பஞ்சாப், ஹரியானா உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
2006ஆம் ஆண்டு கொலை வழக்கில் சாமியார் ராம்பால் ஜாமீனில் வெளியே உள்ளார். இது தொடர்பான வழக்கு விசாரணை ஜூலை 15-ந் தேதி ஹிசார் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு ராம்பால் ஆதரவாளர்கள் குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டனர்.

இதனை நீதிமன்ற அவமதிப்பாக வழக்காக பஞ்சாப்- ஹரியானா நீதிமன்றம் பதிவு செய்து ராம்பால் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக உத்தரவிட்டது. ஆனால் ராம்பால் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதனைத் தொடர்ந்து ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்டையும் பஞ்சாப்- ஹரியானா உயர்நீதிமன்றம் பிறப்பித்தது. ஆனாலும் ராம்பால் தரப்பு இறங்கி வருவதாக இல்லை.
போலீசார் அவரை கைது செய்துவிடாதபடி ஆதரவாளர்கள் ஆசிரமத்தில் குவிந்துள்ளனர். இந்த நிலையில் இன்றும் இந்த வழக்கை பஞ்சாப் ஹரியானா உயர்நீதிமன்றம் விசாரித்தது. அப்போது இன்னமும் ஏன் ராம்பாலை ஹரியானா மாநில போலீசார் கைது செய்யவில்லை என்று காட்டம் காட்டினர் நீதிபதிகள்.
ராம்பாலை வரும் வெள்ளிக்கிழமைக்குள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டதுடன் கொலை வழக்கில் ராம்பாலின் ஜாமீனை ஏன் ரத்து செய்யக் கூடாது என்ற நோட்டீஸையும் நீதிபதிகள் அனுப்பி வைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications