‛அல்லாஹு அக்பர்’ கோஷமிட்ட முஸ்கான்! ஹிஜாப் தடையால்.. தேர்வு எழுதாமல் புறக்கணிப்பு!
மண்டியா: ஹிஜாப் தடை தொடர்பாக மண்டியா கல்லூரியில் நடந்த போராட்டத்தின்போது ‛அல்லாஹு அக்பர்' என கோஷமிட்ட மாணவி இன்று நடைபெற்ற பிகாம் 2ம் ஆண்டுக்கான தேர்வை எழுதவில்லை. ஹிஜாப் அணிய கல்வி நிறுவனங்களில் தடை விதிக்கப்பட்டதால் அவர் தேர்வை புறக்கணித்துள்ளார்.
கர்நாடக பியூ கல்லூரிகளில் ஹிஜாப் அணிய எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு போராட்டங்கள் நடந்தன. அப்போது சில மாணவர்கள் காவிஷால் அணிந்து ஹிஜாப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த போராட்டம் கர்நாடகத்தின் பல பகுதிகளுக்கு பரவியது. சிவமொக்கா உள்ளிட்ட சில இடங்களில் வன்முறை வெடித்தன. இது சர்ச்சையை கிளப்பின.

‛அல்லாஹு அக்பர்’ கோஷம்
பிப்ரவரி 8ம் தேதி மண்டியாவில் உள்ள பிஇஎஸ் கல்லூரியில் காவிஷால் அணிந்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது முஸ்கான் என்ற மாணவி முன்பு மாணவர்கள் ‛ஜெய்ஸ்ரீராம்' என்று கோஷமிட்டனர். இதையடுத்து அந்த மாணவி தனது கையை உயர்த்தி ‛அல்லாஹு அக்பர்' என பதில் கோஷமிட்டபடி நடந்து சென்றார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

மாணவிக்கு பரிசு
மேலும் சிலர் வீர பெண்மணி என அவரை புகழ்ந்தனர். மாணவியின் வீடியோவுக்கு முஸ்லிம் அமைப்பினர், சில அரசியல் கட்சி தலைவர்கள் பாராட்டுகள் தெரிவித்தனர். முஸ்லிம் அமைப்பு ஒன்றின் சார்பில் மாணவிக்கு ரூ.5 லட்சம் ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது. மேலும் மும்பையின் பாந்த்ரா கிழக்கு தொகுதி எம்எல்ஏ ஜிஷான் சித்திக், மாணவி முஸ்கானின் வீட்டுக்கு சென்று பாராட்டினார். அவருக்கு ஐபோன், ஸ்மார்ட் வாட்ச் பரிசாக வழங்கப்பட்டது.

தேர்வு புறக்கணிப்பு
இந்நிலையில் தான் இந்த மாணவி கல்லூரியில் தேர்வு எழுதுவதை புறக்கணித்துள்ளார். அதாவது மைசூரு பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளில் 2ம் ஆண்டு பிகாம் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு இன்று துவங்கியது. மண்டியா பிஇஎஸ் கல்லூரியில் பிகாம் 2ம் ஆண்டு படித்து வரும் மாணவி முஸ்கான் இந்த தேர்வை எழுதவில்லை. தேர்வுக்கான ஹால்டிக்கெட்டையும் அவர் பெற்று கொள்ளவில்லை.

காரணம் என்ன
ஹிஜாப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் அவர் கல்லூரியில் தேர்வு எழுத வரவில்லை எனவும், அவரை வேறு கல்லூரியில் சேர்க்க குடும்பத்தினர் முடிவு செய்து இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. கர்நாடக கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் தடை செல்லும் என கர்நாடக அரசின் உத்தரவை அம்மாநில உயர்நீதிமன்றம் சமீபத்தில் உறுதி செய்து தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை தொடர்ந்து மாநிலத்தின் பல்வேறு கல்லூரிகளில் முஸ்லிம் மாணவிகள் தேர்வை புறக்கணித்து வருகின்றனர். மேலும் கல்லூரிகளுக்கு செல்வதையும் நிறுத்தியுள்ளனர். மேலும் ஹிஜாப் அணிய அனுமதிக்க வேண்டும் என தொடர்ந்து அவர்கள் வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications