இமாச்சல பிரதேசத்தில் மீண்டும் காங். ஆட்சி-புதிய முதல்வர் ரேஸில் 7 'தலைகள்'- இன்று முடிவு அறிவிப்பு!
சிம்லா: இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றியைப் பெற்று ஆட்சியை மீண்டும் கைப்பற்றியுள்ளது. இமாச்சல பிரதேசத்தின் புதிய முதல்வர் யார் என்பதை காங்கிரஸ் கட்சி இன்று முடிவு செய்ய உள்ளது.
68 இடங்களைக் கொண்ட இமாச்சல பிரதேச சட்டசபைக்கான தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் காங்கிரஸ் கட்சி 40 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியைப் பிடித்தது. பாஜக 25 இடங்களிலும் சுயேட்சைகள் 3 இடங்களிலும் வென்றுள்ளன.
இமாச்சல பிரதேசத்தில் ஆட்சியில் இருந்த பாஜக முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் தமது பதவியை ராஜினாமா செய்தார். இதனைத் தொடர்ந்து புதிய முதல்வரை காங்கிரஸ் கட்சி இன்று முடிவு செய்ய உள்ளது. இமாச்சல பிரதேசத்தின் சிம்லாவில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் அனைவரும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இமாச்சல பிரதேச காங்கிரஸில் 7 பெருந்தலைகள் முதல்வர் பதவியை எதிர்நோக்கி காத்திருக்கின்றன. இமாச்சல பிரதேசத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் வீரபத்ரசிங் அங்கு செல்வாக்குமிக்க தலைவர் .அவரது மனைவி பிரதிபா சிங், எம்.பி.யாக உள்ளார். அவர் இந்த தேர்தலில் போட்டியிடாத போதும் முதல்வர் யார் என்ற பட்டியலில் அவரது பெயரும் அடிபடுகிறது. ராகுல் காந்திக்கு மிகவும் நெருக்கமான வீரபத்ர சிங் கோஷ்டிக்கு எதிரான சுக்விந்தர் சுகு, எதிர்க்கட்சித் தலைவராக இருந்த முகேஷ் அக்னிஹோத்ரி ஆகியோரும் முதல்வர் பதவிக்கான ரேஸில் உள்ளனர்.
சென்னைக்கு அருகே 320 கி.மீ. தொலைவில் மாண்டஸ் புயல்- இன்று நள்ளிரவு மாமல்லபுரம் அருகே கரையை கடக்கிறது
வீரபத்ரசிங் குடும்ப விசுவாசியான சீனியர் மோஸ்ட் தலைவர் தாகுர் கவுல் சிங், ராஜவம்சத்தைச் சேர்ந்த ஆஷா குமார் உள்ளிட்ட மொத்தம் 7 தலைவர்களின் பெயர்கள், முதல்வர் பதவிக்கான பட்டியலில் உள்ளது இமாச்சல பிரதேச தேர்தல் பொறுப்பாளரான சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் கூறுகையில், கட்சி மேலிடம்தான் முதல்வர் யார் என்பதை முடிவு செய்யும் என்றார்.