"எனது பெயர் முகமது தீபக்.." முஸ்லீம் முதியவரை துன்புறுத்திய பஜ்ரங் தள்.. ஆதரவாக நின்ற இந்து இளைஞர்
டேராடூன்: உத்தரகண்ட் மாநிலத்தில் பஜ்ரங் தள் உறுப்பினர்கள் முஸ்லீம் கடைக்காரரை மிரட்டிய நிலையில், அவருக்கு ஆதரவாக ஜிம் உரிமையாளர் தீபக் நின்றுள்ளார். முஸ்லீம் கடைக்காரருக்கு ஆதரவாகப் பேசிய தீபக், "எனது பெயர் முகமது தீபக்" எனச் சொன்னது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. அதேநேரம் வலதுசாரி கும்பல் தீபக்கை கடுமையாகச் சாடி வருகிறது.
உத்தராகண்ட் மாநிலம் கோத்வாரை சேர்ந்த 46 வயதான ஜிம் உரிமையாளர் தீபக் குமார். இவர் கடந்த வாரம் தனது நண்பர் கடைக்குச் சென்றுள்ளார். அப்போது அருகே இருந்த 70 வயதான கடைக்காரர் ஒருவரிடம் பஜ்ரங் தள் அமைப்பினர் சிலர் பிரச்சனை செய்துள்ளனர். அதாவது அந்த முதியவர் பாபா ஸ்கூல் டிரஸ் என்ற பெயரில் கடை ஒன்றை நடத்தி வருகிறார்.

ஆதரவாக வந்த இளைஞர்
பாபா என்ற பெயரை இந்துக்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் இதனால் கடையின் பெயரை மாற்ற வேண்டும் எனச் சொல்லி அச்சுறுத்தியுள்ளனர். இதைக் கண்ட தீபக், அவர்களிடம் நியாயம் கேட்டுள்ளார். அந்த முஸ்லீம் கடைக்காரருக்கு ஆதரவாகப் பேசியுள்ளார். இந்தக் கடை 30 ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது.. திடீரென வந்து பெயரை மாற்றச் சொல்வதை ஏற்க முடியாது என சொல்லியுள்ளார். அப்போது அங்கிருந்த பஜ்ரங் தள் உரிமையாளர்கள் தீபக்கையும் அச்சுறுத்தியுள்ளனர்.
மேலும், பெயரைச் சொல்லும்படியும் கட்டாயப்படுத்தியுள்ளனர். அப்போதும் அஞ்சாமல் அவர், "எனது பெயர் முகமது தீபக்" என்று கூறியுள்ளார். தனது இந்து அடையாளத்தை முஸ்லீம்களின் அடையாளத்துடன் இணைத்து, இந்தியாவின் ஒற்றுமை குறித்த தனது கருத்தை வெளிப்படுத்தும் நோக்கில் அவர் இப்படிச் சொல்லியிருக்கிறார். இதைக் கேட்டதும் அங்கிருந்தவர்கள் மேலும் ஆத்திரமடைந்துள்ளனர்.
"எனது பெயர் முகமது தீபக்"
"எனது பெயர் முகமது தீபக்" என இவர் சொன்னதும் இணையத்தில் டிரெண்டானது. பலரும் தீபக்கிற்கு ஆதரவாகச் சமூக வலைத்தளங்களில் கருத்துகளைப் பதிவிட்டு வருகிறார்கள். அதேநேரம் சில வலதுசாரி கும்பல்கள் தீபக் மீது வன்மத்தைக் கக்கியும் வருகிறார்கள். அவர் மீதும் அவரது குடும்பத்தினர் மீதும் மிக மோசமான கருத்துகளையும் சொல்லி வருகிறார்கள். மேலும், சனிக்கிழமை இரவு கோத்வாரில் உள்ள தீபக் குமார் வீட்டையும் வலதுசாரி கும்பல் முற்றுகையிட்டுள்ளது. போலீசார் தலையிடும் அளவுக்கு நிலைமை போய் இருக்கிறது. இதனால் அங்குப் பதற்றமான சூழலே இருக்கிறது.
நான் முதலில் மனிதன்
இந்தச் சூழலில் தீபக் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில வீடியோக்களை பதிவிட்டு இருக்கிறார். அதில் அவர், "நான் இந்துவல்ல, முஸ்லீம் அல்ல, சீக்கியர் அல்ல, கிறிஸ்தவரும் அல்ல. எல்லாவற்றுக்கும் மேலாக, நான் ஒரு மனிதன். நான் இறந்த பிறகு, எந்த மதத்திடமும் நான் பதில் சொல்லத் தேவையில்லை.. கடவுளிடமும் மனித குலத்திடமும்தான் நான் பதிலளிக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.
மேலும் என்ன நடந்தாலும் பின் வாங்கப் போவதில்லை எனச் சொன்ன அவர், இந்தியா மதச்சார்பற்ற நாடு என்றும் குறிப்பிட்டார். தீபக் குமார் மற்றொரு வீடியோவில், "நான் உங்கள் அனைவருக்கும் ஒன்றை மட்டும் சொல்ல விரும்புகிறேன்.. நமது நாட்டிற்குத் தேவையானது அன்பும் பாசமுமே தவிர, வெறுப்பு அல்ல. நீங்கள் எவ்வளவு வெறுப்பை வேண்டுமானாலும் பரப்பலாம்.. அதை நிறுத்த முடியாது. ஆனால் அன்பைப் பரப்புவது மிகப் பெரிய விஷயம்," என்று தெரிவித்தார்.
போலீஸ் சொல்வது என்ன
இந்தச் சம்பவம் தொடர்பாகப் போலீசார் இரண்டு எஃப்.ஐ.ஆர்களை பதிவு செய்துள்ளனர். பஜ்ரங் தள உறுப்பினர்கள் சிலர் தன்னை மிரட்டியதாக உள்ளூர் கடைக்காரரான வகீல் அஹ்மத் புகார் அளித்துள்ளார். அதில் 30 ஆண்டுகளாக 'பாபா ஸ்கூல் ட்ரெஸ்' என்ற பெயரில் கடை நடத்தி வரும் நிலையில், ஜனவரி 2026ல் 4 பேர் தன்னை வந்து மிரட்டி அச்சுறுத்தியதாகக் கூறியுள்ளார். அவர்கள் மீது போலீசார் பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளது.
இது தவிரத் தீபக் குமார் வீட்டில் முற்றுகையிட்டது தொடர்பாகவும் மத நல்லிணக்கத்தைப் பாதிப்பது, தேசிய நெடுஞ்சாலையை முடக்குவது, காவல்துறை அதிகாரிகளைத் தாக்கியது உள்ளிட்ட பிரிவுகளில் 34 வலதுசாரி உறுப்பினர்கள் மீது போலீசார் எஃப்.ஐஆர் பிதிவு செய்துள்ளனர்.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications