உதவ யாருமில்லை.. இந்துவின் உடலை சுமந்து சென்று இந்து மதப்படி இறுதி சடங்கு செய்த முஸ்லிம்கள்!
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் புற்றுநோய் காரணமாக ஒரு இந்து மனிதர் உயிரிழந்த நிலையில் அவரது முஸ்லீம் அண்டை வீட்டார்கள் முழு இந்து சடங்குகளுடன் அவரை தகனம் செய்தனர்.
கொரோனா வைரஸ் தொற்று அனைவரின் வாழ்க்கையிலும் முன்னெப்போதும் இல்லாத சவால்களை உருவாக்கியுள்ளது, ஆனால் இது மக்களை ஒன்றுபட்டு நிற்க வைத்து மற்றவர்களுக்கு உதவ ஒரு வாய்ப்பையும் அளித்துள்ளது.

ராஜேந்திரா என்ற நபர் ராஜஸ்தானின் ஜெய்ப்பூரின் பஜ்ரங் நகர் பட்டா பாஸ்தி பகுதியில் வசித்து வந்தார். அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். இதன் காரணமாக ஜெய்ப்பூரில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராஜேந்திரா திங்கள்கிழமை காலமானார்.
ஆனால் அவரது குடும்பத்தில் ஆண்கள் யாரும் இல்லாததால் அவரது உடலை தகனம் செய்வது பெரும் சவாலாக மாறியது. அத்துடன் ஊரடங்கு காரணமாக அவரது உறவினர்கள் யாரும் இறுதி சடங்குகளுக்கு ஜெய்ப்பூருக்கு செல்ல முடியவில்லை. அக்கம் பக்கத்திலும் இந்துக்கள் யாரும் இல்லை.
இந்த சூழ்நிலையில் அவரது வீட்டின் அருகே வசிக்கும் முஸ்லிம்கள் இறுதி சடங்குகளை செய்ய முன்வந்தனர். அவர்கள் அவருடைய உடலை இந்து மத விதிமுறைகளின்படி தயார் செய்து தகனம் செய்வதற்காக சுடுகாட்டிற்கு சுமந்து சென்று இந்து மத வழக்கப்படி சடங்குகளை செய்தனர். பின்னர் தகனம் செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியினரிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications