வருவார்.. ஆனால் வரமாட்டார்.. அமித்ஷா, நட்டாவை வைத்து ‛கேம்’ ஆடிய பாஜகவினர்.. குஜராத்தில் ஆக்ரோஷம்
காந்திநகர்: குஜராத் வதோதரா பொதுக்கூட்டத்தில் ‛‛வருவார்.. ஆனால் வரமாட்டார்..'' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா ஆகியோரின் பெயரை வைத்து பாஜகவினர் ‛கேம்' ஆடியதால் கட்சியினர் கடும் வாக்குவாதம் செய்தனர். மேலும் உணவு, தண்ணீர் வசதி செய்யப்படவில்லை என தொண்டர்கள் விரக்தியை வெளிப்படுத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.
குஜராத்தில் உள்ள 182 சட்டசபை தொகுதிகளுக்கு டிசம்பர் 1 மற்றும் டிசம்பர் 5ம் தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் பாஜக, காங்கிரஸ், ஆம்ஆத்மி இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
குஜராத் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரின் சொந்த மாநிலமாகும். இதனால் இங்கு மீண்டும் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதில் இருவரும் உறுதியாக உள்ளனர்.
ஆசிரமத்தை 'அந்தப்புரமாக' மாற்றிய நபர்.. கதறிய சிறுமிகள்.. நாசிக்கில் கொடூரம்
பாஜக தீவிரம்
இதனால் குஜராத் சட்டசபை தேர்தலில் பாஜகவின் வேட்பாளர்களை இருவரும் பார்த்து பார்த்து தேர்வு செய்துள்ளனர். குஜராத்தில் கடந்த 27 ஆண்டுகளாக பாஜக ஆட்சி நடக்கிறது. இதனால் அதிருப்தியில் குஜராத்தில் ஆட்சியை இழந்துவிடக்கூடாது என்பதில் பாஜக மிகவும் கவனமாக உள்ளது. அதன்படி பூத் மட்டத்திலான கமிட்டியினர் முதல் தலைவர்கள் வரை அனைவரையும் ஒருங்கிணைத்து பாஜக தேர்தல் பணியை செய்து வருகிறது.
அமித்ஷா பிரசாரம்
பிரதமர் நரேந்திர மோடி பல கட்ட பிரசாரங்களை தொடங்கி உள்ளார். அதேபோல் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குஜராத்திலேயே முகாமிட்டுள்ளார். குஜராத்தில் தினமும் பொதுக்கூட்டங்களில் அவர் பங்கேற்று பேசி வருகிறார். நேற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குஜராத்தில் சூறாவளி பிரசாரம் செய்தார். அதன்படி ஜப்ராபாத், தாலஹா மற்றும் மஹூவா பகுதிகளில் நடந்த பொதுக்கூட்டங்களில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்று பேசினார்.
ஏமாற்றிய அமித்ஷா
அதன்பிறகு மாலை 5.30 மணிக்கு அமித்ஷாவின் 4வது கூட்டம் வதோதராவில் உள்ள மெக்சானாநகர் கார்பா மைதானத்தில் நடைபெற இருந்தது. இதற்காக மேடைகள் அமைக்கப்பட்டு இருந்தன. பாஜக தலைவர்கள், தொண்டர்கள் என ஏராளமானவர்கள் அங்கு மாலை 3 மணியில் இருந்தே திரண்டனர். அதோடு வதோதரா விமான நிலையம் வரும் அமித்ஷாவை வரவேற்க கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் விமான நிலையத்தில் காத்திருந்தனர். ஆனால் இறுதி வரை மத்திய உள்துறை அமைச்சர் அங்கு வரவில்லை.
குழம்பிய கட்சியினர்
இதனால் வேட்பாளர்கள், கட்சி தலைவர்கள் சோகமடைந்தனர். மேலும் அமித்ஷா வருவதாக கூறிய நிலையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தாலும் இறுதி நேரத்தில் அவர் வராமல் இருந்ததற்கான காரணம் எதுவும் தெரிவிக்கவிக்கப்படவில்லை. இதனால் கட்சியினர் குழப்பம் அடைந்தனர். இதனால் அமித்ஷா வராததை அவர்கள் உடனடியாக பொதுமக்களிடம் தெரிவிக்கவில்லை. மாறாக அந்த பகுதி பாஜக தலைவர்கள் பிரசார மேடையை பயன்படுத்தி பேசி வந்தனர். அமித்ஷாவின் வருகை கேன்சல் செய்யப்பட்டு விட்டது என்பதை கூறாமல் அவர்கள் பேசி வந்தனர்.
சீறிய தொண்டர்கள்
இந்த வேளையில் பாஜக செய்த திட்டங்கள் பற்றியும், தாமரை சின்னத்துக்கு வாக்களிக்க கோரியும் கேட்டு கொண்டனர். இதற்கிடையே மேடையில் பேசியவர்கள் மீது சந்தேகம் அடைந்தவர்கள் பொதுக்கூட்டத்தில் இருந்து வெளியேறி வீட்டுக்கு புறப்பட்டனர். இதனால் சுதாரித்து கொண்ட பாஜக தலைவர்கள் இரவு 7.15 மணிக்கு மேடையில் இருந்தபடி, ‛‛பொதுககூட்டத்துக்கு அமித்ஷாவின் வருகை கேன்சல் செய்யப்பட்டுள்ளது. அவருக்கு பதில் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா வருகை தர உள்ளார்'' எனக்கூறி சமாளித்தனர். இதை கேட்ட நிலையில் பொதுக்கூட்டத்துக்கு வந்திருந்தவர்கள் கோபத்தில் கூட்டம் கூட்டமாக வெளியேறினர்.
கட்சியினர் வாக்குவாதம்
இந்த வேளையில் சில பெண்களும், ஆண்களும் கட்சியினரும் அமித்ஷா வராவிட்டால் அதுபற்றி முன்கூட்டியே சொல்லி இருக்கலாமே எனக்கூறினர். மேலும் சிலர் பொதுக்கூட்டத்தில் தண்ணீர், உணவு உள்ளிட்ட வசதிகள் செய்யப்படவில்லை என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இன்னும் ஒரு பெண் தொண்டர்களோ, ‛‛நல்லவேளை இப்போதாவது சொன்னீர்களே. நாங்கள் எங்கள் குடும்பத்துக்கு இரவு உணவு சமைக்க செல்கிறோம்'' என கூறி புறப்பட்டனர். இறுதியாக இந்த கூட்டத்துக்கு ஜேபி நட்டாவும் வரவில்லை. இதனால் எஞ்சி இருந்த தொண்டர்கள் ஏமாற்றத்துடன் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.