ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய ம.பி. ஆளுநர் ராம்நரேஷ் யாதவ் ராஜினாமா!!
போபால்: வனக் காவலர் தேர்வு முறைகேட்டில் தொடர்பிருப்பதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து மத்திய பிரதேச ஆளுநர் ராம்நரேஷ் யாதவ் இன்று தமது பதவியை ராஜினாமா செய்தார்.
மத்திய பிரதேச மாநிலத்தில் சிவராஜ்சிங் சவுகான் தலைமையில் பாரதிய ஜனதா ஆட்சி நடந்து வருகிறது. அம்மாநிலத்தில் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த ராம்நரேஷ் யாதவ் கடந்த 2011-ம் ஆண்டு முதல் ஆளுநராகப் பதவி வகித்து வருகிறார்.
கடந்த 2013-ம் ஆண்டு மத்திய பிரதேசத்தில் வனக் காவலர் பணிக்கு ஆட்களை தேர்ந்தெடுக்க அம்மாநில அரசு வேலைவாய்ப்பு தேர்வு வாரியம் மூலம் எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது. அந்த தேர்வில் பெரிய அளவில் முறைகேடு நடந்து இருப்பதாக பரபரப்பு குற்றச்சாட்டுக்கள் வெளியாகின.
இதுபற்றி போலீசார் விசாரணை நடத்திய போது அரசு வேலைவாய்ப்பு தேர்வு வாரிய ஊழியர்களில் பலர் இந்த முறைகேட்டில் சம்பந்தப்பட்டிருப்பது தெரிய வந்தது. தேர்வு வாரிய ஊழியர் நிதீன் மொகிந்திரா என்பவர் இது தொடர்பாக கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அரசின் உயர் அதிகாரிகள், அரசியல்வாதிகளும் இந்த முறை கேட்டில் முக்கியப் பங்கு வகித்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த நிலையில் ஆளுநர் ராம்நரேஷ் யாதவின் சிறப்பு அதிகாரி தன்ராஜ் யாதவ் கைதானார். அதன் பிறகே இந்த முறைகேடு தொடர்பான முழு விவரங்களும் வெளிச்சத்துக்கு வந்தது.
வனக் காவலர் தேர்வு முறை கேட்டில் மத்திய பிரதேச மாநில ஆளுநர் ராம்நரேஷ் யாதவும் நேரடியாக சம்பந்தப்பட்டுள்ள அதிர்ச்சி தகவலை சிறப்பு அதிரடிப் படையினர் நேற்று வெளியிட்டனர்.
ஆளுநர் ஊழல் செய்து இருப்பதற்கான ஆதாரங்களையும் அவர்கள் வெளிப்படுத்தினார்கள். இதனால்தான் சிறப்பு அதிரடிப்படை போலீசார் ஆளுநர் மீது முதல் தகவல் அறிக்கையை (எப்.ஐ.ஆர்.) பதிவு செய்துள்ளனர். அடுத்தகட்ட நட வடிக்கையாக ஆளுநர் ராம் நரேஷ்யாதவ் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் இந்திய தண்டனை சட்டம் பிரிவு 420 (மோசடி), 120பி (கிரிமினல் சதி) ஆகிய 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த 3 பிரிவுகள் தவிர மேலும் சில உட்பிரிவுகளிலும் வழக்கு தொடர சிறப்பு அதிரடிப்படை போலீசார் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.
தேர்வு வாரிய முறைகேட்டில் உங்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு விட்டதால், உடனே ஆளுநர் பதவியை ராஜினாமா செய்யுங்கள் என்று மத்திய உள்துறை அமைச்சகம், ராம்நரேஷ் யாதவிடம் கேட்டுக் கொண்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து ராம்நரேஷ் யாதவ் இன்று தமது ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
In a significant political development, Madhya Pradesh Governor Ram Naresh Yadav, who has come under the scanner over his alleged involvement in the Vyapam scam, resigned from the office on Wednesday.