படுக்கையில் சிறுநீர் கழித்ததற்கு தண்டனை... 5 வயது சிறுமியின் பிறப்புறுப்பில் சூடு போட்ட ஹாஸ்டல் வார்
போபால்: மத்தியப் பிரதேசத்தில் படுக்கையில் சிறுநீர் கழித்ததால் 5 வயது சிறுமிக்கு சூடு போட்டு சித்ரவதை செய்த விடுதி பெண் ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த ரேகா அகிர்வார் தனது கணவருடன் கோலாரில் வசித்து வருகிறார். இவர்களது 5 வயது, 7 வயது மகள்கள் போபாலில் அரசு உதவியுடன் நடைபெறும் பெண்கள் விடுதியில் கடந்த டிசம்பர் மாதம் சேர்க்கப்பட்டனர்.
இந்நிலையில், சில நாட்களுக்கு முன்னர் விடுதிக்கு சென்ற ரேகா, தனது மகள்களை வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு தனது 5 வயது மகளை குளிக்க வைத்த போது அவரது தொடை மற்றும் அந்தரங்க உறுப்புகளில் தீக்காயம் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உடனடியாக இது தொடர்பாக தனது மகளிடம் ரேகா விசாரித்துள்ளார். அப்போது அச்சிறுமி, ‘தினமும் படுக்கையில் சிறுநீர் கழிப்பதற்காக, தன்னை அங்கிருந்த ஊழியர்கள் இவ்வாறு சித்ரவதை செய்தனர்' என்பதைக் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.
இதைக்கேட்டு ஆவேசம் அடைந்த தாய் ரேகா விடுதிக்கு சென்று கேட்டார். அப்போது அங்கிருந்த ஊழியர்கள் 5 வயது சிறுமி படுக்கையில் அடிக்கடி சிறுநீர் கழித்தார். அதை தடுக்கவே மெழுகுவர்த்தியால் சூடு போட்டதாக தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக ரேகா போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விடுதி பெண் ஊழியர் கலாவதியை கைது செய்தனர். அவர் மீது சிறுவர் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.