நடு இரவில் பஸ் மாற்றம்.. காங்.,மஜத எம்எல்ஏக்களின் நள்ளிரவு திகில் பயணம்!
காங்கிரஸ், மஜத எம்எல்ஏக்கள் பெங்களூரில் இருந்து நேற்று இரவோடு இரவாக ஹைதராபாத் சென்று இருக்கிறார்கள்.
Recommended Video
சென்னை: காங்கிரஸ், மஜத எம்எல்ஏக்கள் பெங்களூரில் இருந்து நேற்று இரவோடு இரவாக ஹைதராபாத் சென்று இருக்கிறார்கள். நேற்று இரவு முழுக்க அவர்கள் மிகவும் திகிலான பயணம் செய்துள்ளனர்.
கர்நாடகாவில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை பலம் கிடைக்காத காரணத்தால் பெரிய குழப்பமான சூழ்நிலை நிலவி வருகிறது. பாஜக 104 தொகுதிகளில் வென்று இருந்தாலும் அந்த கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. 78 இடங்களில் வென்ற காங்கிரஸ், 38 தொகுதிகளில் வென்ற மஜத உடன் இணைந்து ஆட்சி அமைக்க உரிமை கோரி இருந்த போதும், ஆளுநர் அவர்களை ஆட்சி அமைக்க அழைக்கவில்லை.
பல்வேறு பரபரப்புகளுக்கும், களேபரங்களுக்கும் மத்தியில் கர்நாடக முதல்வராக எடியூரப்பா பதவி ஏற்றுள்ளார். எடியூரப்பா ஆளுநரிடம், பெரும்பான்மையை நிரூபிக்க 7 நாள் அவகாசம் கேட்டு இருந்தார், ஆளுநர் அவருக்கு 15 நாள் அவகாசம் கொடுத்துள்ளார். உச்ச நீதிமன்றம் பதவி ஏற்பிற்கு தடை விதிக்க மறுத்த நிலையில் தற்போது, எடியூரப்பா முதல்வராக பதவி ஏற்றுள்ளார்.
ஈகிள் கார்டன்
இந்த நிலையில் ஈகிள்டன் சொகுசு விடுதியில், காங்கிரஸ் மற்றும் மஜத கட்சியை சேர்ந்த எம்எல்ஏக்கள் தங்கி இருந்தனர். ஆனால் எடியூரப்பா அரசு பதவி ஏற்றதும் அங்கு அவர்களுக்கு கொடுக்கப்பட்ட பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டது. இதனால் அவர்கள் வேறு மாநிலத்திற்கும் மாறும் முயற்சி எடுத்தனர். முக்கியமாக பாஜக இல்லாத மாநிலத்திற்கு செல்ல அவர்கள் முடிவெடுத்தனர்.
பெரிய ரகசியம்
காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் சிவக்குமார் நேற்று பேட்டி அளித்தார். என்ன மாதிரியான திட்டங்கள் எடுக்கப்பட்டுள்ளது என்று அவர் பேட்டியில் கூறியுள்ளார்.காங்கிரஸ், மஜத எம்எல்ஏக்களுக்கு தமிழகம் பாதுகாப்பு தருவதாக கூறியுள்ளது. தமிழ்நாடு, பஞ்சாப், ஆந்திரா, தெலுங்கானா, கேரளா அழைத்துள்ளது. மொத்தமாக இந்த ஐந்து மாநிலமும் எப்போது வந்தாலும் பாதுகாப்பு கொடுக்கிறோம் என்றுள்ளது என்றார், ஆனால் எங்கு செல்வது என்பதை ரகசியமாக வைத்து இருந்தார்.
கேரளா செல்ல வாய்ப்பு
நேற்று இரவு இவர்கள் கேரளா கிளம்ப வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டது. அங்கு இதற்காக ஏற்பாடுகளும் செய்யப்பட்டது. கர்நாடகாவில் பாஜகவை ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்புவிடுத்துள்ளதை பினராயி விஜயன் எதிர்த்து கருத்து கூறியிருந்தார். இந்த நிலையில், அவரும், காங்கிரஸ் மற்றும், மஜத எம்எல்ஏக்களுக்கு உரிய பாதுகாப்பு உள்ளிட்ட வசதிகளை வழங்க முன் வந்துள்ளதாக கூறப்பட்டது. நேற்று இரவு எச்ஏஎல் விமான நிலையத்தில் இருந்து காங்கிரஸ் மற்றும் மஜத எம்எல்ஏக்கள், பெங்களூர் புற நகரிலுள்ள ரிசார்ட்டிலிருந்து கொச்சி நோக்கி செல்ல இருந்தனர்.
மத்திய அரசு செக்
ஆனால் கடைசி நேரத்தில் காங்கிரஸ்,மஜத எம்எல்ஏக்கள் பெங்களூருவிலிருந்து கொச்சிக்குச் செல்லவிருந்த தனி விமானத்திற்கு மத்திய விமான போக்குவரத்து இயக்ககம் அனுமதி மறுத்தது. இதனால் அவர்கள் கேரளா செல்வது சிக்களாகியது. கடைசி நேரத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் எல்லோரும் குழம்பி இருக்கிறார்கள். அதில் உள்ள சில எம்எல்ஏக்கள் மிகவும் வயதானவர்கள் என்பதால், இரவிற்குள் எதாவது ஏற்பாடு செய்ய வேண்டும் என்று யோசித்துள்ளனர்.
சூப்பர் உதவி
இந்த நிலையில் கடைசி நேரத்தில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் உதவிக்கு வந்துள்ளார். அங்கிருந்து தேசிய நெடுஞ்சாலை வழியாக தெலுங்கானா செல்ல திட்டமிட்டு சென்றுள்ளனர். தெலுங்கானா எல்லையை அடைந்த பின் முழு போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் கூறியுள்ளார். இதனால் இரவு 12.30 மணிக்கு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் காரிலும், மஜத எம்எல்ஏக்கள் பஸ்ஸிலும் சென்று உள்ளனர்.
|
பஸ்
இந்த நிலையில் நேற்று இவர்கள் மிகவும் த்ரில்லான விஷயம் ஒன்று செய்துள்ளனர். தேசிய நெடுஞ்சாலையில் போலீஸ் மடக்கி விசாரிக்க வாய்ப்புள்ளது, எதவாது பிரச்சனை செய்ய வாய்ப்புள்ளது என்று, பஸ் மாறியுள்ளனர். இவர்கள் எப்போதும் செல்லும் ஷர்மா பேருந்தில் சென்று பின் ஆரஞ்ச் டிராவல் பேருந்திற்கு மாறி, பின் மீண்டும் சர்மா பேருந்தில் சென்றுள்ளனர், வயதானவர்களை வைத்துக் கொண்டு நடு இரவில் இரண்டு முறை பேருந்து மாறியுள்ளனர்.
ஹோட்டலுக்கு வந்தனர்
இந்த நிலையில் இன்று அதிகாலை காங்கிரஸ் எம்எல்ஏக்கள் எல்லோரும் சரியாக 9 மணிக்கு ஹோட்டலுக்கு வந்துள்ளனர். தெலுங்கானாவில் உள்ள பார்க் ஹயாட் சொகுசு விடுதியில் அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பேருந்தில் வருவதால், இன்னும் சில நிமிடத்தில் மஜத எம்எல்ஏக்கள் அதே பகுதிக்கு வந்து விடுவார்கள். ஒரு இரவும் முழுக்க பாஜகவிற்கு பயந்து இவர்கள் ஊர் ஊராக சுற்றியுள்ளனர்.