ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் திடுக்.. சிபிஐ விசாரணை ரகசிய தகவல் ப.சிதம்பரம் வீட்டுக்கு போனதா?
டெல்லி: சுப்ரீம் கோர்ட்டில் சிபிஐ தாக்கல் செய்த ரகசிய ஆவணங்கள் குறித்த தகவல் மத்திய முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் வீட்டில் கண்டெடுக்கப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2006ம் ஆண்டு அப்போதைய மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் ஏர்செல்-மேக்சிஸ் தொழிலுக்கு அன்னிய நேரடி முதலீடுக்கு அனுமதி கொடுத்தார். ரூ.600 கோடி வரையிலான திட்டங்களுக்கு மட்டுமே நிதி அமைச்சர் அனுமதி கொடுக்கும் அதிகாரம் படைத்தவர்.
அதற்கு மேல் மதிப்பிலான ஒப்பந்தங்களுக்கு, பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு ஒப்புதல் வழங்க வேண்டும். ஆனால், ரூ.3,500 கோடி மதிப்புடைய இந்த ஒப்பந்தத்திற்கு, விதிகளை சிறிதும் கண்டுகொள்ளாமல், சிதம்பரம் ஒப்புதல் வழங்கியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சிபிஐ விசாரணை
இதுகுறித்து அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. அதேபோல சிபிஐ தனக்கு உரித்தான கோணங்களில் ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்த முறைகேடு வழக்கை விசாரித்து வருகிறது. இந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் டெல்லியிலுள்ள சிதம்பரம் வீடு, சென்னையிலுள்ள வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் ரெய்டு நடத்தினர்.

சிதம்பரம் பேட்டி
இதன்பிறகு பேட்டியளித்த சிதம்பரம், இந்த ரெய்டில் எதுவும் சிக்கவில்லை. என்னிடம் அதிகாரிகள் மன்னிப்பு கேட்டு சென்றனர் என்றார். கார்த்தி சிதம்பரம் வீடு என நினைத்து சிதம்பரம் வீட்டில் அதிகாரிகள் தவறாக ரெய்டு நடத்திவிட்டதாகவும் செய்திகள் வெளியாகின.

திடுக்கிடும் தகவல்
ஆனால், அன்றைய தினம் நடத்தப்பட்ட ரெய்டில் முக்கியமான ஒரு ஆவணம் கிடைத்துள்ளதாக இப்போது தகவல் வெளியாகியுள்ளது. ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு தொடர்பாக, 2013ம் ஆண்டில் (மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான அரசு) சுப்ரீம் கோர்ட்டில் சிபிஐ சீலிடப்பட்ட உரையில் தகவல்களை தாக்கல் செய்திருந்தது. அந்த சீலிடப்பட்ட உரைக்குள் வைக்கப்பட்டிருந்த தகவல்கள், சிதம்பரம் வீட்டிலும் இருப்பதாக அமலாக்கத்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.

சிபிஐக்குள் விசாரணை
இதை பார்த்து திடுக்கிட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் சிபிஐக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து, தங்கள் துறையை சேர்ந்த யாரோ கருப்பு ஆடுகள்தான் ரகசிய விசாரணை தகவல்களை சிதம்பரத்திற்கு அளித்திருக்க வேண்டும் என்ற சந்தேகத்தின்பேரில், துறைக்குள்ளாக ரகசிய விசாரணையை சிபிஐ துவக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.












Click it and Unblock the Notifications