அப்படியே தமிழக ஸ்டைல்.. பாஜகவை வீழ்த்த மம்தா பானர்ஜி எடுத்த "பிரம்மாஸ்திரம்.." பின்னணியில் "அவர்"
கொல்கத்தா: மேற்கு வங்காளத்தில் பாஜக வெற்றி பெறுவதை தடுப்பதற்கு பிரம்மாஸ்திரத்தை கையில் எடுத்துள்ளார் மமதா பானர்ஜி.
தமிழகத்தில் எந்த மாதிரியாக தேர்தல் அறிக்கையில் திட்டங்கள் அறிவிக்கப்படுகிறதோ, ஏறத்தாழ அதே மாதிரியான ஒரு தேர்தல் அறிக்கையை மமதா பானர்ஜி வெளியிட்டுள்ளார்.
தமிழக பாணி அரசியலை மம்தா பானர்ஜி வெளியில் எடுப்பதற்கு காரணம் என்ன? இதன் பின்னணியில் யார் இருக்கக் கூடும் என்று தகவல்கள் தற்போது அரசியல் வட்டாரத்தில் இறக்கை கட்டி பறந்து வருகின்றன.

மம்தா பானர்ஜி திட்டம்
8 கட்டங்களாக சட்டசபை தேர்தலை எதிர்கொள்கிறது மேற்குவங்க மாநிலம். கடந்த லோக்சபா தேர்தலில் 18 தொகுதிகளை வென்று மிகப்பெரிய விசுவரூபம் எடுத்து மேற்குவங்கத்தில் புதிய அரசியல் சக்தியாக உருமாறியுள்ளது பாஜக. ஆனால் மம்தா பானர்ஜியின் செல்வாக்கு பெரிய அளவுக்கு சரியவில்லை என்பது யதார்த்தம். ஆனாலும், மத்தியில் ஆளும் பாஜகவை எதிர்ப்பது அவ்வளவு லேசுப்பட்ட வேலை இல்லை என்பதை மம்தா பானர்ஜியும் புரிந்து வைத்துள்ளார். மத்திய அரசு தொடர்ந்து மேற்கு வங்க மாநில அரசுக்குக் கொடுத்து வந்த அழுத்தங்களை அவர் நன்றாக உணர்ந்தவர் என்பதால் இந்த தேர்தலில் பாஜகவுக்கு நினைத்து பார்க்க முடியாத தோல்வியை பரிசாக வழங்க வேண்டும் என்ற முனைப்பில் முழு முயற்சியில் களம் இறங்கியுள்ளார் மம்தா பானர்ஜி.

பிரம்மாஸ்திரம்
ஆயிரம்தான் ஆவேசமான பிரச்சாரங்கள் அதிரடிகள் என்று மம்தா பானர்ஜி வாணவேடிக்கை காட்டினாலும், உண்மையிலேயே பாஜகவுக்கு எதிராக அவர் கையில் எடுத்துள்ள பிரம்மாஸ்திரம் என்று சொன்னால் அது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை தான் என்று அடித்துச் சொல்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். ஏனென்றால் இதுவரை மேற்கு வங்க மாநில மக்கள் பார்த்திராத புதுவகை தேர்தல் அறிக்கையாக இது இருக்கிறது. அதே நேரம் தமிழக மக்கள் பல தேர்தல்களாக பார்த்து பார்த்து பழகிப்போன பாணியிலான தேர்தல் அறிக்கை இது என்பது குறிப்பிடத்தக்க அம்சம்.

அட்ரா சக்க
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதைப் போல, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள கவர்ச்சிகர அறிவிப்புகளில் ஒரு அறிவிப்பை பார்ப்போம்.. இது தமிழகத்தில் கூட இதுவரை எந்த கட்சியும் அறிவிக்காத ஒரு தேர்தல் அறிவிப்பு என்றால் அது மிகை கிடையாது. ஆம்.. மாணவர்களுக்கு 10 லட்சம் மதிப்புள்ள கிரெடிட் கார்டு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார் மம்தா பானர்ஜி. இந்த கிரெடிட் கார்டை பயன்படுத்தி மாணவர்கள் தங்களுக்கு தேவையான கடன் உதவியை பெற்றுக் கொள்ளலாம். வட்டி வெறும் 4 சதவீதம் மட்டும்தான். மக்கள் கையில் பணப்புழக்கமும் இல்லாத இந்த காலகட்டத்தில் இளைஞர்களைக் கவரும் வகையில் இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார் மம்தா பானர்ஜி.

கையில் பணம்
சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு உதவி தொகையாக 10,000 ரூபாய் வழங்கப்படும் என்பது திரிணாமுல் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையின் மற்றொரு சிறப்பம்சமாகும். நிதி உதவி சார்ந்த மற்றொரு அறிவிப்பு என்பது.. ஏழைகளுக்கு உறுதிப்படுத்தப்பட்ட ஆண்டு நிதி உதவி திட்டம் ஆகும் . அதாவது பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த ஏழைகளாக இருந்தால் ஆண்டுக்கு 12,000 ரூபாய் வழங்கப்படும். பிற ஏழைகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று சொல்கிறது தேர்தல் அறிக்கை. நேரடியாக பலனாளிகளுக்கு பணத்தை தரும் திட்டம் தமிழகத்தில் நீண்ட காலமாக அமலில் இருக்கிறது. பொங்கல் போன்ற நாட்களில் ரேஷன் கடை வாயிலாக, ஏழைகளுக்கு நிதி உதவி வழங்குகிறது. இப்போது அதே போன்ற ஒரு திட்டத்தை கையில் எடுத்துள்ளார் மம்தா பானர்ஜி.

பின் தங்கிய மாநிலம்
மேற்கு வங்க மாநிலத்தில் நீண்ட காலமாக கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி செய்து வந்தது. அதன் பிறகு மம்தா பானர்ஜி ஆட்சி நடைபெற்று வருகிறது . அங்கு இலவசங்கள் என்ற பேச்சே இல்லை. தமிழகத்தை விடவும் பொருளாதார ரீதியாகவும் சுகாதார மற்றும் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் ரீதியாகவும் பின்தங்கிய மாநிலம் மேற்குவங்கம். இந்த நிலையில்தான் தமிழகத்தில் வழங்கப்படுவது போன்று நிதி உதவி திட்டங்களை கையில் எடுத்துள்ளார் மம்தா பானர்ஜி.

பின்னணியில் யார்?
இது ஏழைகள்.. நடுத்தர மக்களிடம் வாக்களிக்கும்போது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். இது பாஜகவை வீழ்த்த உதவும் பிரம்மாஸ்திரம் என்று நம்புகிறார் அவர். இந்தத் திட்டங்களின் பின்னால் யார் இருக்கக்கூடும் என்ற ஒரு தகவலும் தற்போது கசிந்து வருகிறது . வடகிழக்கு மாநிலமான மேற்கு வங்கம் மற்றும் தமிழகத்துக்குமான தேர்தல் அரசியல் என்பது எப்போதுமே தனித்துவம் கொண்டதாகவே இருந்துள்ளது. பெரிய அளவுக்கு ஒற்றுமைகள் இருக்காது. இந்த முறை இரண்டும் ஒரே நேர்கோட்டில் பயணிப்பதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று.. இரண்டு மாநில அரசுகளுக்கும் , எதிர்க்கட்சிகளுக்கும் இது வாழ்வா சாவா என்பது போன்ற ஒரு போராட்டமாக இருக்கிறது. இன்னொரு ஒற்றுமை.. திமுகவின் அரசியல் வியூக வல்லுனராக இருக்கக்கூடிய பிரசாந்த் கிஷோர் திரிணாமுல் காங்கிரசுக்கும் அதேபோன்ற வேலை பார்த்து வருகிறார். தமிழகத்தின் களநிலவரம் அவருக்கு நன்கு தெரியும். மேற்கு வங்கத்திலும் இதே போன்ற திட்டங்களை அமல்படுத்துவதன் மூலமாக பாஜகவுக்கு பிரேக் போடலாம் என்பது அவரது மூளையில் உதித்த திட்டம் தான் என்று திரிணாமுல் காங்கிரஸ் வட்டாரங்கள் சொல்கின்றன. இதுதான் தமிழகத்துக்கும் மேற்கு வங்கத்துக்கு மான இணைப்பு புள்ளி என்கிறார்கள் அவர்கள்.












Click it and Unblock the Notifications