ஆந்திர சட்டப் பேரவையிலிருந்து ரோஜா இடை நீக்கம்: ரத்து செய்தது உயர் நீதிமன்றம்
ஹைதராபாத்: நடிகையும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ-வுமான ரோஜாவை ஆந்திர சட்டப்பேரவையிலிருந்து ஓராண்டு காலம் இடைநீக்கம் செய்த நடவடிக்கைக்கு ஹைதராபாத் உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் நகரி தொகுதி எம்.எல்.ஏ.வாக பதவி வகித்து வருகிறார் நடிகை ரோஜா. இவர், கடந்தாண்டு டிசம்பர் மாதம் அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவை தரக்குறைவாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து சட்டப்பேரவை விதி எண் 340 கீழ் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு சட்டசபையில் இருந்து ஒரு ஆண்டுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டார் ரோஜா.
சபாநாயகர் சிவபிரசாத் ராவ் நடவடிக்கையை எதிர்த்து ரோஜா ஹைதராபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனிடையே இந்த வழக்கு விசாரணை வேண்டுமென்றே தாமதப்படுத்துவதாக கூறி உச்சநீதிமன்றத்தில் ரோஜா சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் ‘‘ரோஜா வழக்கை விசாரித்து 23-ந் தேதிக்குள் தீர்ப்பு வழங்க வேண்டும்'' என்று ஹைதராபாத் உயர்நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டது.
அந்த மனு நீதிபதி ராமலிங்கேஸ்வர ராவ் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி கூறியதாவது:
அவை நடவடிக்கைகளுக்கு ஊறு விளைவிக்கும் எந்த ஒர் உறுப்பினரையும் கூட்டத் தொடரிலிருந்து இடைநீக்கம் செய்யும் உரிமை பேரவைத் தலைவருக்கு உண்டு. அதே வேளையில், எம்எல்ஏ ரோஜா இடைநீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில் உரிய விதிகள் கடைப்பிடிக்கப்படவில்லை.
அதை மனுதாரருக்கு சாதகமாக்கி ரோஜாவுக்கு எதிராக ஆந்திர சட்டப் பேரவைத் தலைவர் மேற்கொண்ட நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது என்று நீதிபதி ராமலிங்கேஸ்வர ராவ் தெரிவித்தார்.
இதனிடையே, உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக ஆந்திர அரசு தெரிவித்துள்ளது. பேரவைத் தலைவரின் முடிவில் நீதிமன்றம் தலையிடக் கூடாது என விதிகள் உள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.