உங்களைவிட மிகப் பெரிய ரவுடி நான்... சிவ்பால் யாதவ் மக்களின் தலைவர்: முலாயம்சிங் ஆவேசம்
லக்னோ: சமாஜ்வாடி கட்சியில் இருக்கும் சில இளைஞர்கள் தங்களை பெரிய ரவுடியாக கருதுகிறார்கள்... அவர்கள் அனைவரையும் விட மிகப்பெரிய ரவுடி நான் என்றும் அமைச்சரவையில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்ட சிவ்பால் யாதவ் மக்களின் தலைவர் என்றும் ஆவேசமாக முலாயம்சிங் யாதவ் பேசியுள்ளார்.
உத்தரப்பிரதேசத்தில் ஆளும் சமாஜ்வாடி கட்சிக்குள் மிகப் பெரிய குழப்பம் ஏற்பட்டுள்ளது. முதல்வர் அகிலேஷ் யாதவ், அவரது சித்தப்பா சிவ்பால் யாதவை அமைச்சரவையில் இருந்து டிஸ்மிஸ் செய்தார். இதனால் அகிலேஷ் யாதவை சமாஜ்வாடி கட்சியில் இருந்து நீக்க முலாயம்சிங் முடிவெடுத்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் லக்னோவில் இன்று நடைபெற்ற சமாஜ்வாடி கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் பேசிய அகிலேஷ் யாதவ், தாம் தனிக்கட்சி தொடங்கப் போவதாக வெளியானவை பொய்யான செய்திகள் என்று கண்ணீருடன் கூறினார். ஆனால் அகிலேஷ் அப்படியான முடிவை என்னிடமே தெரிவித்தார் என சித்தப்பா சிவ்பால் யாதவ் கூறினார்.
இதனைத் தொடர்ந்து கட்சியின் தலைவரான முலாயம்சிங் யாதவ் பேசியதாவது:
சமாஜ்வாடி கட்சியை உருவாக்க நாங்கள் மிகவும் கஷ்டப்பட்டோம். இந்த கட்சியில் விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாதவர்கள் தலைவர்களாக இருக்க முடியாது.
கட்சியிலும் குடும்பத்திலும் ஏற்பட்டுள்ள குழப்பம் என்னை காயப்படுத்தியுள்ளது. தற்போது கட்சியில் இருக்கும் இளைஞர்கள் தங்களை மிகப் பெரிய ரவுடிகளாக நினைக்கிறார்கள்..
நீங்கள் நினைப்பது போல நான் பலவீனப்படவில்லை. உங்களை எல்லாம்விட மிகப் பெரிய ரவுடி நான்தான். சிவ்பால் யாதவ் எனக்காகவும் கட்சிக்காகவும் செய்தவைகளை அப்படி ஒன்றும் எளிதாக மறந்துவிட முடியாது.
தற்போதைய குழப்பத்துக்கு காரணமே குடிகாரர்களையும் குண்டர்களையும் கட்சியில் சேர்த்ததுதான்... சிலருக்கு அதிகாரம் கிடைத்துவிட்டால் உடனே தலைக்கணம் வந்துவிடுகிறது. சிவ்பால் யாதவ் சாதாரண மனிதர் அல்ல.. மக்கள் தலைவர்.
அமர்சிங் என்னுடைய சகோதரர். மிகவும் கடினமான நாட்களில் எனக்கு ஆதரவாக இருந்தவர்.
இவ்வாறு முலாயம்சிங் பேசினார்.