எதிர்கட்சிகள் பிரிவினையை தூண்டி அச்சுறுத்துகின்றன: கேரளாவில் சோனியா குற்றச்சாட்டு
கொச்சி: ஊழலுக்கு எதிராக போராட எதிர்க்கட்சிகள் விரும்பவில்லை, அனைவரின் மனநிலையை குழப்பி ஆதாயம் தேடுவதே எதிர்கட்சிகளின் முக்கிய நோக்கமாக இருக்கிறது என்று கேரளாவில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய காங்கிரஸ் தலைவர் சோனியா குற்றம் சாட்டியுள்ளார்.
கேரளாவில் இன்று காங்கிரஸ் சார்பில் பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. இதில் அக்கட்சித் தலைவர் சோனியா காந்தி கலந்து கொண்டு தனது முதல் தேர்தல் பிரசாரத்தை தொடங்கி பேசியதாவது:
'வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நாங்கள் நிச்சயம் வெற்றி பெறுவோம். மதசார்பின்மை குறித்த கொள்கை இந்தியாவிற்கு பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. இதை பயன்படுத்தி பா.ஜ.க. பிரிவினையை ஏற்படுத்தி வருகிறது.
உம்மன் சாண்டி கேரளாவில் அளப்பரிய பணியாற்றி வருகிறார். நாட்டின் ஒற்றுமைக்காக நாங்கள் போராடி வருகிறோம். வளமான இந்தியாவை உருவாக்குவதற்காகவே பணியாற்றி வருகிறோம். அனைவரின் மனநிலையை குழப்பி ஆதாயம் தேடுவதே எதிர்கட்சிகளின் முக்கிய நோக்கமாக இருக்கிறது.
எங்களின் சாதனைகளை மையமாகக் கொண்டு நாங்கள் மக்களை சந்திக்க உள்ளோம். 2014 தேர்தல் எங்களின் நோக்கம் அல்ல. மக்கள் விரும்பும் இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.
ஊழலுக்கு எதிராக போராட எதிர்க்கட்சிகள் விரும்பவில்லை. ஊழலுக்கு எதிராக பா.ஜ.க. என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? ஆனால் நாங்கள் எப்போதும் அதற்கு எதிராக போராடி வருகிறோம்.
கடந்த 10 ஆண்டுகளில் கிராமப்புற பகுதிகளின் வளர்ச்சிக்காக காங்கிரஸ் அரசு கொண்டு வந்த திட்டங்களால் லட்சக்கணக்கான மக்கள் பயனடைந்துள்ளனர். தகவல் அறியும் உரிமை சட்டம், உணவு பாதுகாப்பு சட்டம் என ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் எத்தனையோ உள்ளன.
ஊழலுக்கு எதிரான சட்டங்களை நிறைவேற்ற காங்கிரஸ் தீவிரம் காட்டி வருகிறது. அனைத்து பிரச்னைகளையும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண காங்கிரஸ் விரும்புகிறது. ஆனால் எதிர்க்கட்சிகள் அதை தூண்டிவிட்டு வன்முறையை தூண்ட முயற்சிக்கின்றனர்.
இவ்வாறு சோனியா காந்தி பேசினார்.