பாஜக 400 இடங்களில் வென்றிருந்தால் இடஒதுக்கீடு சோலி முடிஞ்சிருக்கும்..தெலுங்கானா சிஎம் ரேவந்த் ரெட்டி
ஹைதராபாத்: 2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் பாஜக தனித்து 400 இடங்களில் வென்றிருந்தால் இடஒதுக்கீடு என்பதையே ஒழித்துக் கட்டி இருப்பார்கள்; இந்திய அரசியல் சாசனத்தையே அழித்திருப்பார்கள் என்று தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக ரேவந்த் ரெட்டி கூறியதாவது: 400 இடங்களில் வெல்வோம் என பாஜக தொடர்ந்து பிரசாரம் செய்தது. ஆனால் பாஜகவின் முயற்சியை எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து முறியடித்தன.

பாஜக மட்டும் தனித்தே 400 இடங்களில் வெற்றி பெற்றிருந்தால், இடஒதுக்கீட்டையே அழித்திருப்பார்கள்; அரசியல் சாசனத்தையே மாற்றியிருப்பார்கள். இப்போது அறிவித்ததைப் போல ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு எனும் அறிவிப்பை வெளியிட்டிருக்கமாட்டார்கள்.
தற்போதும் கூட பீகார் முதல்வர் நிதிஷ்குமார் உள்ளிட்டோர் வலியுறுத்தியதால்தான் பிரதமர் மோடி, இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இல்லை எனில் இந்த அறிவிப்பும் வெளியாகி இருக்காது.
ஜாதிவாரி கணக்கெடுப்பு என்பதை கடுமையாக எதிர்த்தவர் பிரதமர் மோடியும் பாஜகவும்தான். உச்சநீதிமன்றத்திலேயே ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தவே முடியாது என பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ததும் மத்திய அரசுதான். தற்போது நிலையை மாற்றிக் கொண்டது பாஜக. காரணம், லோக்சபா தேர்தலில் பெரும்பான்மை கிடைக்காமல் போனதால்தான்.
தற்போதைய அறிவிப்பின் மூலம், ஜாதிவாரி கணக்கெடுப்பில் தெலுங்கானா முன்னோடி மாநிலம் என மோடியே ஒப்புக் கொண்டுவிட்டார். லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் ஆலோசனையை ஏற்றுக் கொண்டுவிட்டார் மோடி. இடஒதுக்கீட்டை அதிகரிக்க போதுமான தரவுகள் தேவை என்றுதான் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. ஜாதிவாரி கணக்கெடுப்பு மூலம் இந்த தரவுகள் கிடைக்கும். இடஒதுக்கீடு அதிகரிக்கும் என்றார்.
முன்னதாக டெல்லியில் நேற்று கூடிய மத்திய அமைச்சரவைக் கூட்டம் ஜாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்புக்கு ஒப்புதல் அளித்தது. இது தொடர்பாக மத்திய அரசு கூறுகையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு, எதிர்வரும் மக்கள் தொகை கணக்கெடுப்பில் சாதிக் கணக்கெடுப்பையும் சேர்க்க முடிவு செய்துள்ளது. நாடு மற்றும் சமூகத்தின் முழுமையான நலன்கள் மற்றும் மதிப்புகளுக்கு தற்போதைய அரசு உறுதிபூண்டுள்ளது என்பதை இது நிரூபிக்கிறது.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 246 ஆவது பிரிவின்படி, மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது ஏழாவது அட்டவணையில் மத்தியப் பட்டியலில் 69 வது இடத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. சில மாநிலங்கள் சாதிகளைக் கணக்கிட கணக்கெடுப்புகளை நடத்தியிருந்தாலும், இந்த ஆய்வுகள் வெளிப்படைத்தன்மை மற்றும் நோக்கத்தில் வேறுபடுகின்றன. சில கணக்கெடுப்புகள் முற்றிலும் அரசியல் கோணத்தில் நடத்தப்படுகின்றன. இது சமூகத்தில் சந்தேகங்களை உருவாக்குகிறது. இத்தகைய சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டும், நமது சமூகக் கட்டுமானம் அரசியல் நிர்ப்பந்தத்தின் கீழ் வராமல் இருப்பதை உறுதி செய்யவும், சாதிக் கணக்கெடுப்பை ஒரு தனி கணக்கெடுப்பாக நடத்துவதற்குப் பதிலாக பிரதானக் கணக்கெடுப்பில் சேர்க்க வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்திருந்தது.












Click it and Unblock the Notifications