கலைக்க வேண்டுமானால் முதலில் கர்நாடக அரசைதானே கலைக்க வேண்டும் டியர் சு.சுவாமி
டெல்லி: தடையை மீறி தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெற்றால் ஆட்சியை கலைக்க முடியும் என மிரட்டியுள்ளார் பாஜக ராஜ்யசபா எம்.பி சுப்பிரமணியன் சுவாமி.
ஜெயலலிதாவுக்கே இல்லாத துணிச்சலாக, முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் ஜல்லிக்கட்டை நடத்தியே தீருவோம், எள்ளளவும் பின்வாங்க மாட்டோம் என அறிக்கை விட்ட பின்னணியில் இதுபோன்ற ஒரு தகவலை பரப்பி 'பூச்சு'காட்டியுள்ளார் சுவாமி.
நீதிமன்ற ஆணையை மதிக்காமல் ஒரு சம்பவம் நடந்துவிட்டது என்றால் நீதிமன்ற கண்டனத்திற்கு அந்த அரசு உள்ளாகுமே தவிர ஆட்சியை கலைப்பது சாத்தியமா? என்ற சட்ட ரீதியிலான கேள்வி ஒருபக்கம் என்றால், தார்மீக ரீதியாக மற்றொரு கேள்வியும் எழுகிறது.

கர்நாடக அரசு
இப்படி நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் செயல்படுவதாக கலைக்க வேண்டுமானால் சுப்பிரமணியன் சுவாமி முதலில் கர்நாடக அரசைத்தான் கலைக்க முயல வேண்டும். ஏனெனில் சுப்ரீம்கோர்ட் எவ்வளவோ கடுமையாகவும், மென்மையாகவும் மாறி, மாறி காவிரியில் தண்ணீர் திறக்கும், உத்தரவுகளை பிறப்பித்தும் கடந்த சில மாதங்களாக கர்நாடகா அதில் எதையுமே மதிக்கவில்லை.

அரசு பொறுப்பாகாது
நீதிமன்றம் அதை அவமதிப்பாக கூட கருதவில்லை என்பது இதில் கவனிக்கத்தக்கது. அதுதான் மக்கள் ஆட்சிக்கு கோர்ட் கொடுத்த கவுரவம். இத்தனைக்கும் உச்சநீதிமன்ற உத்தரவை அமல்படுத்த வேண்டிய இடத்தில் இருந்தது கர்நாடக அரசு. ஜல்லிக்கட்டு விஷயத்தில் அப்படியில்லை. மக்களே அரசுக்கு தெரியாமல் ஜல்லிக்கட்டுகளை ஆங்காங்கு நடத்திக்கொண்டால் அதற்கு அரசு எப்படி நேரடி பொறுப்பாளியாக முடியும். வீட்டுக்கு ஒரு போலீசை நியமிக்க அரசால் எப்படி முடியும்.

மிரட்டல்
ஜல்லிக்கட்டு நடத்திய பிறகு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமானால் அரசால் முடியுமே தவிர, ஒவ்வொருவரையும் பிடித்து வைத்திருக்க முடியாது. இது தெரிந்தும், ஜெயலலிதா போன்ற அரசியல் அனுபவமும் தைரியமும் இல்லதா புதிய தலைமையிலான அரசாங்கத்தை மிரட்டி பார்க்கிறார் சுப்பிரமணியன் சுவாமி.

பார்த்திபன் கருத்து
இயக்குநர் பார்த்திபன் இன்று அளித்த பேட்டியில் கூட இதை தெளிவுபடுத்தினார். உச்சநீதிமன்ற தீர்ப்பு மதிக்க வேண்டியதுதான். ஆனால் எதிலிருந்து தொடங்குவது என்பது அவசியம். முல்லை பெரியாறு, காவிரி தீர்ப்புகள் நிறைவேற்றப்பட்ட பிறகு ஜல்லிக்கட்டு நிறைவேற்றப்பட்டுள்ளதா என்பதை பார்க்கலாமே என்றார் அவர்.

ஜெயலலிதா கடிதம் எழுதினார்
இதுகுறித்து டிவிட்டரில் அவரிடம் ஒருவர் கேட்டதற்கு, "காவிரி தீர்ப்பை அமல்படுத்தாத கர்நாடக அரசை கலைக்க நீங்கள் கோரிக்கை விடுத்தீர்களா? ஜெயலலிதா வெறுமனே கடிதம்தானே எழுதிக் கொண்டிருந்தார்" என்று சுப்பிரணியன் சுவாமி தெரிவித்துள்ளார். மேலும், பாஜகவுக்கு ஓட்டு கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை. அரசியல் சாசனத்தை காப்பாற்றுவது முக்கியம் என்றும் அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications