1kg பிளாஸ்டிக் கொடுத்தால் 2kg அரிசி... ஆந்திராவில் புதுமை படைத்த கலெக்டர்
அமராவதி: ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் ஒரு கிலோ பிளாஸ்டிக்கை கொடுத்துவிட்டு இரண்டு கிலோ அரிசி வாங்கிச் செல்லலாம் என்ற புதுமை திட்டத்தை செயல்படுத்தியுள்ளார் அம்மாவட்ட ஆட்சியர் சத்தியநாராயணன் ஐ.ஏ.ஏஸ்.
பிளாஸ்டிக் இல்லா மாவட்டமாக அனந்தபூரை மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ள மாவட்ட ஆட்சியர் சத்தியநாராயணனுக்கு பாராட்டுகள் குவிகின்றன.
அனந்தபூர் மாவட்டத்திற்குட்பட்ட குண்டக்கல்லில் இதற்கான தொடக்க விழா நடைபெற்றது.

விழிப்புணர்வு
பிளாஸ்டிக்கால் ஏற்படும் தீமைகள் குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டாலும், அது மக்கள் மத்தியில் முழுமையாக சென்று சேரவில்லை என்று தான் கூற வேண்டும். இன்றும், பிளாஸ்டிக் பயன்பாடு தொடர்ந்த வண்ணம் தான் உள்ளது.

ஒத்துழைப்பு இல்லை
அரசும் பிளாஸ்டிக் பயன்பாட்டை கட்டுப்படுத்துவதற்காக எத்தனையோ வழிகளில் விளம்பரம் செய்து விட்டது. ஆனாலும், அதனை முழுமையாக கட்டுப்படுத்தமுடியவில்லை. காரணம் பிளாஸ்டிக்கை ஒழிக்க அரசுக்கு மக்கள் போதிய ஒத்துழைப்பு நல்குவதில்லை.

பாராட்டு
இந்நிலையில் ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்ட ஆட்சியர் சத்யநாராயணன், தனது நிர்வாகத்திற்குட்பட்ட பகுதியில் பிளாஸ்டிக்கை ஒழிக்க புதுமை திட்டம் ஒன்றை செயல்படுத்தியுள்ளார். இதற்காக அவருக்கு சமூக ஆர்வலர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் என பல தரப்பினரும் பாராட்ட்டு தெரிவித்து வருகின்றனர்.

2 கிலோ அரிசி
ஒரு கிலோ பிளாஸ்டிக்கை வழங்கினால் 2 கிலோ அரிசியை வழங்கும் திட்டம் அனந்தபூர் மாவட்டம் குண்டக்கல்லில் தொடங்கப்பட்டுள்ளது. இது பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

புதிய முயற்சி
ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தனது நடவடிக்கைகளிலும், செயல்பாடுகளிலும் புதுமையை கடை பிடித்து வருவது அனைவரும் அறிந்தது. அந்த வகையில் அவரது பாணியிலேயே மாவட்ட ஆட்சியர் சத்யநாராயணனும் இந்த புதிய முயற்சியை தொடங்கியுள்ளார்.












Click it and Unblock the Notifications