ரத்து செய்யப்பட்ட பயணிகள் ரயில்! சொந்த ஊருக்கு சென்று வாக்களிக்க முடியாமல் தவிக்கும் அசாம் மக்கள்!
திஸ்பூர்: அசாமில் சரக்கு ரயில் ஒன்று தடம் புரண்டதால், 6 பயணிகள் ரயில்கள் ரத்தாகி உள்ளது. எனவே லோக்சபா தேர்தலுக்கு வாக்களிக்க செல்ல முடியாமல் அசாம் மக்கள் தவித்து வருகின்றனர்.
கடந்த 2019ம் ஆண்டை போலவே இந்த முறையும் நாடு முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. மொத்தம் உள்ள 543 லோக்சபா தொகுதிகளில் முதற்கட்டமாக 21 மாநிலங்களில் 102 தொகுதிகளுக்கு ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து இரண்டாம் கட்டமாக 13 மாநிலங்களில் உள்ள 88 லோக்சபா தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது. தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் அசாமும் ஒன்று. இங்குள்ள 5 லோக்சபா தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்று வருகிறது.

தேர்தலுக்காக வாக்களிப்பதற்காக நாடு முழுவதும் இருந்து அசாம் மக்கள் இன்று தங்கள் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர். திப்பு, நாகோன், சில்சார், கரீம்கஞ்ச் மற்றும் தர்ராங்-உடல்குரி என 5 தொகுதிகளிலும் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. ஆனால் வாக்களிப்பதற்காக ரயிலில் வந்த அசாம் மக்கள் வாக்களிக்க முடியாமல் தவித்து வருகின்றனர். சரக்கு ரயில் ஒன்று தடம் புரண்டதால் சுமார் 6 பயணிகள் ரயில் ரத்து செய்யப்பட்டிருக்கிறது.
ஜடிங்கா லம்பூர் மற்றும் நியூ ஹரங்கஜாவோ ரயில் நிலையங்களுக்கு இடையே சரக்கு ரயிலின் என்ஜின் தடம் புரண்டுள்ளது. எனவே 6 ரயில்கள் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. அதேபோல 7 ரயில்கள் இறுதி நிறுத்தத்தை அடைவதற்கு முன்பே பாதியில் நிறுத்தப்பட்டிருக்கிறது. 3 ரயில்களின் நேரம் மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது. இதனால் அசாம் மக்கள் கொதிப்படைந்துள்ளனர்.
மேலும், பாதியில் நிறுத்தப்பட்ட ரயில்களில் உள்ள பயணிகளுக்கு பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. ரயிலில் உள்ள ஆயிரம் பயணிகளுக்கு எத்தனை பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் என்று சோஷியல் மீடியாக்களில் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். தற்போது ரயில்கள் ரத்தால் புலம்பெயர் இஸ்லாமிய தொழிலாளர்கள்தான் அதிக அளவு பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது குறித்து ரயில் பயணி ஒருவர் கூறுகையில், "நான் குவஹாத்தியில் இருந்து வரும் ரயிலில் ஹோஜாய் ஸ்டேஷனில் ஏற இருந்தேன். ஆனால், இந்த ரயிலில் வழக்கத்திற்கு மாறான அளவில் கூட்டம் இருந்தது. கொரோனா தொற்று காலத்தில் ரயில்களில் எந்த அளவுக்கு கூட்டம் இருந்ததோ அதே அளவுக்கு இப்போது இருந்தது. எனவே என்னால் பயணம் மேற்கொள்ள முடியவில்லை. ஏதோ சரக்கு ரயில் தடம் புரண்டதாம். எனவே பெரும்பாலான ரயில்கள் ரத்து செய்யப்பட்டன" என்று கூறியுள்ளார்.
ரயில்கள் ரத்தால் பெரும்பாலான பயணிகளால் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல முடியவில்லை என்றும், வாக்களிக்க முடியவில்லை என்றும் கூறியுள்ளனர். கடந்த சில நாட்களாக ரயில் விபத்துகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. போதுமான ரயில்கள் இல்லாதது, சாமானிய மக்களுக்கான ரயில்களுக்கு பதில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுவது போன்றவை எளிய மக்களை ரயில் பயணங்களிலிருந்து தள்ளி வைத்திருக்கிறது எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றன.
இப்படி இருக்கையில், அசாமில் சரக்கு ரயில் என்ஜின் தடம் புரண்டதால் 6 பயணிகள் ரயில் ரத்து செய்யப்பட்டிருப்பது விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications