தேர்வு நடத்துவதில் 'முன்மாதிரி' பீகார் தான் !! கேலிக்கூத்தாகும் கல்வி!!!
பிகார் : ஆயிரக்கணக்கான மாணவர்கள் ஒரே இடத்தில் அமர்ந்து புத்தகங்களை பார்த்து பி.எஸ்சி பட்டப்படிப்பு தேர்வு எழுதியது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகாரில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத்தேர்வில் பள்ளி ஒன்றின் கட்டிடத்தின் மேல் ஏறி மாணவர்களின் உறவினர்களும் நண்பர்களும் விடைகளை தாள்களில் எழுதி வீசி உதவியது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
போலீசார் கண் முன்னே இந்த சம்பவம் அரங்கேறியதால் பெரும் சர்ச்சை எழுந்தது. தற்போது மீண்டும் அங்கு தேர்வு கேலிக்கூத்தாக்கப்பட்டுள்ளது.
சமஸ்திப்பூர் என்ற இடத்தில் கல்லூரி ஒன்றில் பிஎஸ்சி தேர்வு எழுதிய மாணவர்கள் அருகருகே நெருக்கமாக உட்கார்ந்து புத்தகங்களையும், தாள்களில் எழுதப்பட்ட குறிப்புகளையும் பார்த்து தேர்வு எழுதினர். சிலர் செல்போன்களையும் பார்த்து தேர்வு எழுதினர்.
800 மாணவர்கள் மட்டுமே அமர்ந்து தேர்வு எழுத வேண்டிய அறைகளில் 3,000 மாணவர்கள் அமர்ந்து தேர்வு எழுதினர். ஆனாலும் இதனை ஆசிரியர்களோ, தேர்வு மைய கண்கானிப்பாளர்களோ கண்டு கொள்ளவில்லை.
மாணவர்கள் தேர்வு எழுத உரிய வசதிகள் செய்து தரப்படவில்லை என்பதால் தங்களால் இயன்ற அளவில் தேர்வை நடத்தியதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.