வெளிநாட்டு நிதி பெறும் 9,000 என்.ஜி.ஓ.க்களின் உரிமம் ரத்து: மத்திய அரசு அதிரடி
டெல்லி: வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) சட்டத்தை மீறிய சுமார் 9 ஆயிரம் என்ஜிஓக்களின் உரிமத்தை மத்திய அரசு ரத்து செய்துள்ளது.
இது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது,
2009-2010, 2010-2011 மற்றும் 2011-2012 ஆகிய ஆண்டுகளுக்கான வருமான வரி செலுத்துமாறு 10 ஆயிரத்து 343 என்ஜிஓக்களுக்கு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 16ம் தேதி நோட்டீஸ் அனுப்பப்பட்டது. வெளிநாட்டு நிதி பெற்றது, அந்த நிதி எங்கிருந்து வந்தது, எதற்காக நிதி பெறப்பட்டது, அதை வைத்து என்ன செய்யப்பட்டது என்பது உள்ளிட்ட விவரங்களை ஒரு மாதத்திற்குள் அளிக்குமாறு அந்த நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

நோட்டீஸ் அனுப்பப்பட்ட என்ஜிஓக்களில் வெறும் 229 மட்டுமே பதில் அளித்தன. இதையடுத்து வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) சட்டத்தை மீறியதற்காக 8 ஆயிரத்து 975 என்ஜிஓக்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உரிமம் ரத்து செய்யப்பட்ட என்ஜிஓக்களில் 510 என்ஜிஓக்களுக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸ் திரும்பி வந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக மத்திய அரசு சட்ட விதிமீறல் செய்த காரணத்திற்காக கிரீன் பீஸ் என்ற தொண்டு நிறுவனத்தின் உரிமத்தை சஸ்பெண்ட் செய்ததுடன் அதன் வங்கிக் கணக்குகளை முடக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications