இறந்ததாக புதைத்த பச்சிளம் குழந்தை.. 1 மணி நேரம் கழித்து உயிரோடு வந்த அதிசயம்! நெகிழ்ந்த பெற்றோர்
ஜம்மு காஷ்மீர்: ஜம்மு காஷ்மீரில் இறந்ததாக புதைக்கப்பட்ட பச்சிளம் குழந்தை மக்கள் போராட்டத்தால் திடீரென்று உயிர் பிழைத்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஜம்மு காஷ்மீரின் ராம்பன் மாவட்டத்தில் பனிஹால் அருகே உள்ள பங்க்கூட் கிராமத்தை சேர்ந்தவர்பஷாரத் அகமது குஜ்ஜார். இவரது மனைவி ஷமிமா பேகம்.
இந்நிலையில் ஷமிமா பேகம் கர்ப்பமாக இருந்தார். இதையடுத்து பனிஹால் மாவட்ட அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

2 மணிநேரத்தில் இறந்த குழந்தை
இந்நிலையில் நேற்று காலை ஷமிமா பேகத்துக்கு பெண் குழந்தை பிறந்தது. அடுத்த 2 மணிநேரத்தில் குழந்தை அசைவின்றி இருந்ததோடு, அழவும் இல்லை. இதனால் குழந்தை இறந்துவிட்டதாக மருத்துவமனை ஊழியர்கள் தெரிவித்தனர். இதை கேட்டு அவர்களின் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.

குழந்தை புதைப்பு-வாக்குவாதம்
இதையடுத்து குழந்தையை ஹல்லான் கிராமத்துக்கு எடுத்து சென்று இறுதி சடங்குகள் செய்து புதைத்தனர். இதற்கிடையே குழந்தையை அந்த பகுதியில் புதைக்க அங்கு வசிக்கும் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் குழந்தையின் உறவினர்களுக்கும், அவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

உயிர் பிழைத்த குழந்தை
இதையடுத்து குழந்தையின் உடலை தோண்டி எடுத்து இன்னொரு இடத்தில் புதைக்க முடிவு செய்தனர். புதைத்த இடத்தில் ஒரு மணிநேரத்துக்கு பிறகு குழந்தையின் உடலை தோண்டி எடுத்தனர். அப்போது ஆச்சரியப்படும் வகையில் அந்த குழந்தையின் உடலில் அசைவுகள் இருந்தன. குழந்தை உயிரோடு இருந்தது. இதையடுத்து உடனடியாக குழந்தையை தூக்கி கொண்டு மருத்துவமனைக்கு சென்றனர். அங்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

2 பேர் சஸ்பெண்ட்
இதற்கிடையே குழந்தை இறந்ததாக தெரிவித்த மருத்துவமனை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து நர்ஸ் மற்றும் உதவியாளர் ஒருவர் என 2 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இறந்ததாக கருதப்பட்ட பெண் குழந்தை மண்ணில் புதைக்கப்பட்ட நிலையில் மக்கள் போராட்டத்தால் மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டபோது உயிர் பிழைத்த சம்பவம் அங்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications