509 அரசு பள்ளியில் விதிமீறல்! திடீரென்று உருது கற்பித்து வாரவிடுப்பை வெள்ளிக்கு மாற்றியதால் சர்ச்சை
ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் அனுமதியின்றி 407 அரசு பள்ளிகளின் பெயர்களில் உருது என பெயர் சேர்க்கப்பட்டதோடு, 509 பள்ளிகளில் வார விடுமுறையானது ஞாயிறுக்கு பதில் வெள்ளிக்கிழமை மாற்றப்பட்டு இருந்தது தெரியவந்துள்ளது.
சமீப காலமாக இந்தியாவில் பள்ளி, கல்லூரிகளுக்கும் மதசார்ந்த பிரச்சனைகள் ஏற்பட்டு வருகிறது. சமீபத்தில் கூட கர்நாடகத்தில் மாணவ-மாணவிகள் ஹிஜாப், காவிஷால் அணிந்து சென்றது பெரும் பிரச்சனையாக வெடித்தது.
இந்நிலையில் தான் ஜார்கண்ட் மாநிலத்தில் ஏராளமான பள்ளிகளின் பெயர்களில் உருது என்பது சேர்க்கப்பட்டு இருப்பதோடு, வார விடுமுறையானது வெள்ளிக்கிழமை விடப்பட்டு வந்திருப்பது தெரியவந்துள்ளது. இதுபற்றிய விபரம் வருமாறு:
குறைந்த பாஜகவின் பலம்.. துணை ஜனாதிபதி தேர்தலில் “ஜம்ப்” - காங்கிரஸுக்கு ஜார்க்கண்ட் ஆளுங்கட்சி ஆதரவு
ஜார்கண்ட் அரசு பள்ளியில் உருது
ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோச்சா - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது. ஜார்க்கண்ட் மாநில முதல் அமைச்சராக ேஹமந்த் சோரன் உள்ளார். இந்நிலையில் தான் ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள பல்வேறு அரசு பள்ளிகளில் வார விடுமுறை மாற்றப்பட்டுள்ளது. குறிப்பாக முஸ்லிம் மக்கள் அதிகம் வசிக்கும் இடங்களில் உள்ள பள்ளிகளில் வார விடுமுறையானது ஞாயிறுக்கு பதில் வெள்ளிக்கிழமைக்கு மாற்றப்பட்டுள்ளது. பள்ளியின் பெயர்களில் அனுமதியின்றி உருது என சேர்க்கப்பட்டு உருது மொழி கற்பிக்கப்பட்டு வருவதாகவும் செய்திகள் வெளியாகின.
இறை வழிபாடு மாற்றம்
அதோடு பள்ளிகளில் காலை வேளையில் நடைபெறும் இறை வழிபாட்டு முறையும் மாற்றப்பட்டுள்ளது. வழக்கமான கைகளை கூப்பி வணங்குவதற்கு பதில் இஸ்லாமிய முறை பின்பற்றப்படுவதாக அதில் குறிப்பிடப்பட்டு இருந்தன. உள்ளூர் அரசியல்வாதி, இஸ்லாமிய மதபோதகர்கள் ஆகியோரின் தலையீட்டால் அரசுக்கு தகவல் தெரிவிக்காமல் இந்த செயல்கள் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. இது சர்ச்சையானது
விசாரணைக்கு உத்தரவு
மேலும் பாஜக, இந்து அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த செய்தியை அறிந்த கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்த அதிரடி உத்தரவிட்டனர். அதன்படி தீவிர விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணையின்போது அரசு பள்ளி தொடர்பாக வெளியான செய்தி உண்மை என்பது தெரியவந்தது. மேலும் விசாரணை நடத்திய அதிகாரிகள் பள்ளிகளின் பெயர்களில் சேர்க்கப்பட்டு இருந்து உருது எனும் வார்த்தையை நீக்கி உருது கற்பிக்க தடை விதித்துள்ளனர். மேலும் வெள்ளிக்கிழமை விடுமுறையும் மாற்றப்பட்டது.
509 பள்ளிகளில் விடுமுறை மாற்றம்
இந்நிலையில் தான் சம்பவம் குறித்து பாஜக எம்எல்ஏ ஆனந்த் ஓஜா அரசிடம் இருந்து சில விபரங்களை கேட்டார். அதற்கு அரசு சார்பில் எழுத்து பூர்வமாக பதில் அளிக்கப்பட்டுள்ளது. அதில் திடுக்கிட வைக்கும் விபரங்கள் இடம்பெற்றுள்ளன. எழுத்துப்பூர்வ பதிலில் ‛‛மாநிலம் முழுவதும் 407 அரசு பள்ளிகளின் பெயர்களில் உருது என்ற வார்த்தை சேர்த்து உருது பள்ளிகளாக மாற்றப்பட்டு உள்ளது. 509 பள்ளிகளில் வார விடுமுறையானது ஞாயிறுக்கு பதில் வெள்ளிக்கிழமைக்கு மாற்றப்பட்டுள்ளது. இதுபற்றி விசாரிக்கப்பட்டு வருகிறது. இதுவரை 350 பள்ளிகளில் உருது என்ற வார்த்தை நீக்கப்பட்டுள்ளது. 459 பள்ளிகளில் வார விடுமுறை ஞாயிற்றுக்கிழமையாக மாற்றப்பட்டுள்ளது. ராம்ஹர் மற்றும் கர்வா மாவட்டங்களில் தலா ஒரு உருது அல்லாத பள்ளியில் வழிபாட்டு முறை மாற்றப்பட்டுள்ளது. மீதமுள்ள பள்ளிகளில் மாற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது'' என கூறப்பட்டுள்ளது.
பாஜக எம்எல்ஏ குற்றச்சாட்டு
இருப்பினும் இந்த விபரங்களை ஏற்க ஆனந்த் ஓஜா எம்எல்ஏ மறுத்துள்ளார். தவறான புள்ளிவிபரங்களை அரசு அளிப்பதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், ‛‛மாநிலத்தில் அரசு பள்ளிகள் இஸ்லாமிய பள்ளிகளாக மாற்றப்படுகிறது. இன்னும் பல பள்ளிகளில் விதிகள் மீறப்பட்டுள்ளது என்பதை அரசு புள்ளிவிபரங்களே காட்டுகிறது. இது உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும்'' என கூறியள்ளார்.