மதுரையில் இருந்த கிளம்பியவுடன் வாயில் இருந்து வழிந்த ரத்தம்.. 60 வயது பெண் பலி! விமானத்தில் பரபர
இந்தூர்: மதுரையில் இருந்து டெல்லி சென்ற விமானத்தில் பயணித்த பெண் திடீரென உடல்நலக்குறைவால் உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. இதனால் விமானம் பாதியிலேயே இந்தூரில் தரையிறக்கப்பட்டது.
கடந்த சில காலமாகவே இந்தியாவில் விமானச் சேவை குறித்து வெளியாகும் தகவல்கள் அதிர்ச்சி அளிப்பதாகவே இருந்து வருகிறது. சமீபத்தில் ஏர் இந்தியா விமானத்தில் பெண் ஒருவர் மீது தொழிலதிபர் சிறுநீர் கழித்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது.
இந்த வழக்கு விசாரணை ஒரு பக்கம் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே இண்டோ விமானத்தில் பயணித்த பெண் ஒருவர் திடீரென உடல் நலக்குறைவால் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடுவானில் பற்றி எரிந்த விமானம்.. 40 பேர் உடல் கருகி பலி! காட்டில் விழுந்து நொறுங்க என்ன காரணம்
மதுரை டூ டெல்லி விமானம்
தமிழ்நாட்டில் முக்கிய நகரங்களில் ஒன்றான மதுரையில் இருந்து இந்தியாவில் பல்வேறு இடங்களுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. நேற்று மாலை வழக்கம் போல இண்டிகோ நிறுவனத்திற்குச் சொந்தமான விமானம் மதுரையில் இருந்து டெல்லிக்குப் புறப்பட்டது. அப்போது விமானத்தில் பயணித்த 60 வயதான பெண் ஒருவருக்கு திடீரென உடல்நிலை மோசமடைந்துள்ளது. இதையடுத்து விமானம் இந்தூர் விமான நிலையத்திற்குத் திருப்பி விடப்பட்டுள்ளது.
உயிரிழந்த பெண்
அந்த இண்டிகோ விமானம் தேவி அஹில்யாபாய் ஹோல்கர் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது. இதையடுத்து அந்த பெண் விமான நிலையத்திற்கு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.. இருப்பினும், அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். முதற்கட்ட விசாரணை அடிப்படையில் உயிரிழந்த அந்த பெண் 60 வயதான அதுல் குப்தா என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
வாயில் இருந்து ரத்தம்
மதுரையில் இருந்து விமானம் கிளம்பிய கொஞ்ச நேரத்திலேயே அதுல் குப்தாவுக்கு வாயில் இருந்து ரத்தம் கசிந்துள்ளது... நடுவானிலேயே அவரது உடல்நிலை மோசமடைந்ததாக இண்டிகோ அதிகாரி பிரபோத் சந்திர சர்மா கூறினார். விமான பயணிக்கு உடனடியாக மருத்துவச் சிகிச்சை தேவைப்பட்டதால் அவசரம் காரணமாக, மதுரை- டெல்லி விமானம் இந்தூருக்கு திருப்பி விடப்பட்டதாகவும் மாலை 5:30 மணிக்கு இந்தூர் விமான நிலையத்தில் தரையிறங்கியதாகவும் அதிகாரி தெரிவித்தார்.
இதர பாதிப்புகள்
அங்குத் தரையிறங்கியவுடன் அதுல் குப்தா விமான நிலையத்திற்கு அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.. அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த 60 வயதான அதுல் குப்தாவுக்கு ஏற்கனவே இதய நோய், உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய் இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
போலீசார் தகவல்
இதையடுத்து விமானம் மீண்டும் இந்தூர் விமான நிலையத்தில் இருந்து 6.40 மணிக்குப் புறப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். உயிரிழந்த அந்த அதுல் குப்தா நொய்டாவை சேர்ந்தவர் என்பது போலீசார் தெரிவித்தனர்.. உயிரிழந்த பெண்ணின் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு, அதன் பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என்றும் போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது. நடுவானில் திடீரென சக பயணிக்கு வாயில் இருந்து ரத்தம் வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேபாளம்
இன்றைய தினம் தான் நோபளத்தில் மோசமான விமான விபத்து ஒன்று அரங்கேறியது. 72 பேருடன் சென்ற ஏடிஆர்-72 என்ற பயணிகள் விமானம் நேபாளத்தின் பொகாராவில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த கொடூர விபத்தில் விமானத்தில் பயணித்த ஐந்து இந்தியர்கள் உட்பட 67 பேர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவத்தில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.