என் மனம் இந்தியாவுக்காக எப்போதும் பிரார்த்தித்துக் கொண்டிருக்கும்- சச்சின்

கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் இன்று முதல் முறையாக செய்தியாளர்களைச் சந்தித்தார் சச்சின் டெண்டுல்கர். அப்போது அவர் பல்வேறு தகவல்களை தெரிவித்தார். மேலும் செய்தியாளர்களின் கேள்விகளுக்கும் பதிலளித்தார்.
சச்சின் பேட்டியிலிருந்து சில...
24 வருடமாக சர்வதேச போட்டிகளில் விளையாடிது எனது வாழ்க்கையில் மிகவும் முக்கியமான விஷயமாக நான் கருதுகிறேன். கிரிக்கெட்தான் எனது வாழ்க்கையாக இருந்தது. அதுதான் எனக்கு ஆக்சிஜன்.
30 வருடங்கள் நான் மொத்தமாக கிரிக்கெட் ஆடியுள்ளேன். எனது வாழ்க்கையின் 75 சதவீதம் கிரிக்கெட்தான் ஆக்கிரமித்திருக்கிறது.
நான் ஓய்வு பெற்று 24 மணி நேரம்தான் ஆகிறது. எனது எதிர்காலம் குறித்து முடிவு செய்ய எனக்கு குறைந்தது 24 நாட்கள் ஆகும்.
கடந்த 24 வருடங்களில் நான் பல சவால்களைச் சந்தித்துள்ளேன். இந்தியாவுக்காக நான் நன்றாக ஆட வேண்டும் என்ற அபரிமிதமான ஆர்வமே இதற்குக் காரணம்.
இனிமேலும் நான் கிரிக்கெட்டில் இருக்க மாட்டேன். ஒரு வேளை வேறு எங்காவது நான் விளையாடிக் கொண்டிருக்கலாம். விளையாட்டை விட்டு போவதில் வருத்தம் இல்லை. ஆனால் இதுதான் ஓய்வுக்கு சரியான நேரம் என்று கருதினேன். இதனால்தான் ஓய்வு முடிவை அறிவித்தேன். இதுவரை நான் செய்த கிரிக்கெட் பயணம் மிகவும் ரசிப்புக்குரியதாக இருந்தது.
எனது கிரிக்கெட் ஓய்வு குறித்து நீ்ண்ட காலமாகவே நிறைய சிந்தித்துக் கொண்டிருந்தேன். இப்போது நான் முடிவெடுத்து அறிவித்து விட்டேன். உங்களுக்கும் தெரியப்படுத்தி விட்டேன்.
மும்பையில் எனது கடைசிப் போட்டியை வைக்குமாறு நான் பிசிசிஐயைக் கேட்டுக் கொண்டேன். காரணம், எனது தாயார் நான் விளையாடுவதை முதல் முறையாக நேரில் வந்து பார்கக விரும்பியதால். அவருக்கு ஒரு சர்ப்ரைஸாக இது இருந்தது.
இதயப்பூர்வமாக நான் எப்போதும் இந்தியாவுக்காக ஆடிக் கொண்டிருப்பேன். இந்தியாவுக்காக பிரார்த்தித்துக் கொண்டிருப்பேன்.
எந்தத் துறையாக இருந்தாலும் சரி, ஒரு இந்தியனாக, இந்தியாதான் எனக்கு முதலில் மனதில் வரும் என்றார் சச்சின்.












Click it and Unblock the Notifications