தலித் தொட்ட உடலை தொடமாட்டோம்! இறந்த பின்பும் துரத்தும் தீண்டாமை! ஒடிசாவில் நடந்த கொடூரம்
புவனேஸ்வர்: பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர்கள் பிரேத பரிசோதனை செய்ததால் உடல் நலக்குறைவால் உயிரிழந்தவரின் உடலை பெற்றுக்கொள்ள உறவினர்களும் கிராம மக்களும் மறுப்பு தெரிவித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசா மாநிலத்தில் அரங்கேறியுள்ள இந்த தீண்டாமை கொடுமை குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கிராம மக்கள் உடலை பெற மறுத்த நிலையில் கிராம தலைவியின் கணவர் அந்த நபரின் உடலை தனது பைக்கில் கொண்டு சென்று தகனம் செய்துள்ளார்.

சாதிய வன்கொடுமை
பாரம்பரியம், பண்பாடு ஆகியவற்றிற்கு இந்தியாதான் உலகிற்கே முன்னுதாரணம் என சொல்லப்படும் நிலையில், நாட்டில் ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கும் தனக்கெதிரான தாக்குதல்களை ஆதி திராவிடர் சமூகத்தை சேர்ந்தவர்கள் எதிர்கொள்கிறார்கள். இந்த தாக்குதல்கள், தீண்டாமை, சாதி வன்முறை, பாலியல் வன்கொடுமை என பல்வேறு கோணங்களில் நிகழ்கிறது. இவ்வாறு இருக்கையில் ஒடிசா மாநிலத்தில் இரு தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழப்பு
ஒடிசா மாநிலம் பர்கர் மாவட்டத்தின் பாதம்பூர் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் முச்சுனு எனும் கூலித் தொழிலாளி வாழ்ந்து வந்துள்ளார். அவருக்கு இரண்டு மகள் இருக்கின்றனர். அவரது மனைவி கர்ப்பிணியாக இருக்கிறார். இந்நிலையில் முச்சுனுவுக்கு கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர் அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதனையடுத்து நிலைமை மோசமான காரணத்தினால் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

உடலை வாங்க மறுப்பு
ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துவிட்டார். இதனையடுத்து அவரது உடல் ஆம்புலன்சில் அவரது சொந்த கிராமத்திற்கு கொண்டுவரப்பட்டது. ஆனால் முச்சுவின் உடலை அவரது குடும்பத்தினர் வாங்க மறுத்துவிட்டனர். மேலும், கிராம மக்கள் யாரும் உடலை பெற்றுக்கொள்ள முன்வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் இது குறித்து விசாரித்தபோதுதான் உண்மை வெளிவந்திருக்கிறது. அதாவது, முச்சுவின் உடலை பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர்கள் தொட்டு பிரேத பரிசோதனை செய்ததால் கிராம மக்கள் உடலை வாங்க மறுப்பு தெரிவித்துள்ளனர்.

தகனம்
இதனையடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் விழித்துள்ளார். முச்சுவின் குடும்பத்தினரோ, உடலை சுடுகாட்டுக்கு கொண்டு சென்று எரித்து விடுங்கள் என்று கூறியுள்ளனர். ஆனால் சுடுகாட்டுக்கு போகும் வழியும் சீரற்று ஆம்புலன்ஸ் போக முடியாதவாறு இருந்துள்ளது. நிலைமை இவ்வாறு இருக்க அந்த கிராம தலைவியின் கணவன் உடலை பைக்கில் கட்டி சுடுகாட்டுக்கு கொண்டு சென்று தகனம் செய்துள்ளார். இதையறிந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications