அண்ணியைத் தாக்கி வாயில் பினாயில் ஊற்றி கொல்ல முயற்சி: மைத்துனர்கள் 2 பேர் கைது
தானே: தானே அருகே வரதட்சணைக் கொடுமைக் காரணமாக விவாகரத்து பெற்ற அண்ணியை தன்னுடைய குழந்தைகளை அழைத்து செல்ல வந்த இடத்தில், வாயில் பினாயில் ஊற்றி கொல்ல முயற்சி செய்த மைத்துனர்கள் இருவரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
தானே டோம்பிவிலி கிழக்கு கல்யாண் சீல்ரோடு விருந்தாவன் தெருவை சேர்ந்த மனோஜ் திவாரி என்பவரது மனைவி சந்திரா. இவர்களுக்கு துஷா(6) என்ற மகளும், ஆரியன்(3) என்ற மகனும் உள்ளனர். திவாரி தனது மனைவி சந்திராவை மிரட்டி கூடுதல் வரதட்சனை கேட்டு கொடுமை படுத்தி வந்துள்ளதாகத் தெரிகிறது.
இதனால், சந்திரா கணவரிடமிருந்து சட்டப்பூர்வமாக விவாகரத்துப் பெற்றார். அதன் தொடர்ச்சியாக சந்திரா கணவரை பிரிந்து தாய் வீட்டில் வசித்து வந்தார். குழந்தைகள் தாய் மற்றும் தந்தையுடன் மாறி, மாறி தங்கி வந்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் கணவர் வீட்டில் இருந்த தனது குழந்தைகளை அழைத்து செல்ல மனோஜ் திவாரியின் வீட்டிற்கு சென்றுள்ளார் சந்திரா. ஆனால், குழந்தைகளை சந்திராவுடன் அனுப்ப மறுத்த மனோஜ் திவாரியின் சகோதரர்கள் பப்லு, ராகுல் ஆகியோர் சந்திராவிடம் தகராறு செய்துள்ளனர்.
அப்போது, சந்திராவின் வாயில் வலுக்கட்டாயமாக வீட்டில் இருந்த பினாயிலை எடுத்து ஊற்றி கொல்ல முயற்சித்துள்ளனர். இதில் சந்திரா மயக்கமடைந்தார். அக்கம்பக்கத்தினர் உதவியால் சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு, அங்கு அவருக்கு தீவிர சிகிக்சை பிரிவில் டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதற்கிடையே தகவல் அறிந்து மருத்துவமனைக்கு விரைந்து வந்த மான்பாடா போலீசார், அங்கு சிகிச்சைப் பெற்று வரும் சந்திராவிடம் விசாரணை நடத்தினார்கள்.அப்போது சந்திரா அளித்த புகாரின் அடிப்படையில் மனோஜ் திவாரியின் சகோதரர்கள் பப்லு, ராகுல் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும், மனோஜ் திவாரி வீட்டில் இருந்த 2 குழந்தைகளையும் மீட்டு போலீசார் சந்திராவிடம் ஒப்படைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications