எதிர்க்கட்சியினரின் கடும் அமளிக்கிடையில் வருமானவரி சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றம்
எதிர்க்கட்சியினரின் கடும் அமளிக்கிடையில் வருமானவரி சட்டத் திருத்த மசோதா லோக் சபாவில் நிறைவேற்றப்பட்டது.
டெல்லி: ரூபாய் நோட்டு செல்லாது விவகாரம் தொடர்பாக லோக் சபாவில் விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்பிக்கள் லோக் சபாவில் கடும் அமளியில் ஈடுபட்டிருந்த அதே நேரத்தில், வருமானவரி சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது.
கருப்புப் பணத்தை ஒழிப்பதற்காக என்று கூறி 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று கடந்த 8ம் தேதி மத்திய அரசு அறிவித்தது. அதன் பிறகு, பொதுமக்கள் எவ்வளவு பணம் வரை மாற்றிக் கொண்டால் வரி விதிப்பது உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் எழுத்தது. இவற்றை இருக்கும் சட்டத்தை வைத்து மத்திய அரசால் கையாள முடியவில்லை.

இந்நிலையில், வருமானவரி சட்டத் திருத்த மசோதாவை தாக்கல் செய்து, புதிய விதிகளை கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி, நேற்று லோக் சபாவில் நிதியமைச்சர் அருண் ஜெட்லி வருமானவரி சட்டத் திருத்த மசோதாவை தாக்கல் செய்தார்.
அந்த மசோதாவின் மீதான விவாதம் இன்று லோக் சபாவில் நடைபெற்றது. ரூபாய் நோட்டுக் குறித்த விவாதத்தை நடத்திய பின்னர் இந்த புதிய மசோதா பற்றி விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். மேலும், புதிய மசோதா மக்களுக்கு எதிரானது என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.
இதற்கிடையே, நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, மசோதா குறித்து விளக்கம் அளித்தார். அப்போது, ஊழலை ஒழிக்க இந்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது என்றும் கூறினார். தொடர்ந்து அமைச்சர் பேசும் போது எதிர்க்கட்சிகள் கூக்குரலிட்டு எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்ட போதிலும், வருமானவரி சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது.
இதன் படி, வருமானத்தை கணக்கில் காட்டாமல் வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்ட தொகைக்கு 30 சதவீதம் வருமான வரி விதிக்கப்படும். மேலும், அபராதமாக 10 சதவீத வரியும் இந்தத் தொகைக்கு 33 சதவீதம் கூடுதலாக வரியாகவும் விதிக்கப்படும். மேலும், வருமான வரித்துறையினரின் சோதனையில் கண்டுபிடிக்கப்பட்ட கணக்கில் வராத வருமானத்திற்கு 75 சதவீதம் வரியும், 10 சதவீதம் அபராதமும் விதிக்கப்படும்.
இதனைத் தொடர்ந்து லோக் சபா நாளை காலை 11 வரை ஒத்தி வைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications