மோடியை எதிர்த்து தமிழகத்து 'தேர்தல் மன்னன்' பத்மராஜன் போட்டி
வதோதரா: லோக்சபா தேர்தலில் குஜராத் முதல்வரும் பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடியை எதிர்த்து வதோதரா தொகுதியில் தமிழகத்து தேர்தல் மன்னன் பத்மராஜன் போட்டியிடுகிறார்.
தமிழகத்தின் மேட்டூரைச் சேர்ந்தவர் பத்மராஜன். ஹோமியோபதி சிகிச்சை அளித்து வரும் பத்மராஜன் தேர்தல் காலங்களில் ஊடகங்களுக்கு தீனி போடுகிறவர்.
ஜனாதிபதி தேர்தல், துணை ஜனாதிபதி தேர்தல் என்றெல்லாம் பார்ப்பது இல்லை.. முதல் ஆளாக வேட்புமனுவைத் தாக்கல் செய்து பத்திரிகைகளில் இடம்பிடித்து விடுவது பத்மராஜனுக்கு வழக்கம்.
மோடியை எதிர்த்து போட்டி
தற்போது பாஜகவின் பிரதமர் வேட்பாளர் மோடியை எதிர்த்து குஜராத்தின் வதோதரா தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட வேட்புமனுவை நேற்று தாக்கல் செய்து தேசிய ஊடகங்களிலும் இடம்பிடித்துவிட்டார் பத்மராஜன்.
ஒரு வெளம்பரத்துக்குத்தான்..
நரேந்திர மோடியை எதிர்த்து போட்டியிடுவதற்கு கொள்கை எல்லாம் ஒரு காரணமும் இல்லை.. முழுக்க முழுக்க விளம்பரம் மட்டுமே நோக்கம் என்பதுதான் பத்மராஜனின் "இலக்கு".
159வது வேட்புமனு
கடந்த கால்நூற்றாண்டுகாலமாக பல தேர்தல்களை எதிர்கொண்ட 55 வயது பத்மராஜன் வதோதராவில் தாக்கல் செய்திருப்பது 159வது வேட்பு மனு.
பிரபலங்கள் யார் யார்?
இதற்கு முன்னர் வாஜ்பாய், அப்துல்கலாம், பிரதீபா பாட்டீல், மன்மோகன்சிங் ஆகியோரை எதிர்த்து ஆகியோரை எதிர்த்து பத்மராஜன் போட்டியிட்டிருக்கிறார்.
எல்லா தேர்தலிலும்..
ஜனாதிபதி, துணை ஜனாதிபதி தேர்தல்கள், ராஜ்யச்பா எம்.பிகளுக்கான தேர்தலையும் கூட பத்மராஜன் விட்டு வைத்ததாக சரித்திரம் இல்லை..
6 ஆயிரம் ஓட்டு..
1988ஆம் ஆண்டு முதல் தேர்தல்களை எதிர்கொண்டு வரும் பத்மராஜன் 2011 சட்டசபை தேர்தலில் அவரது சொந்த தொகுதியான மேட்டூரில் 6,273 வாக்குகள் பெற்று வரலாறு படைத்திருக்கிறார்.. இதுதான் அவர் வாழ்நாளில் பெற்ற அதிகபட்ச வாக்குகளாம்.
ரூபாய்.. 12 லட்சம்
மொத்தமாக இப்படி வேட்பு மனு மட்டும் தாக்கல் செய்ய இதுவரை ரூ12 லட்சம் வரை செலவு செய்திருக்கிறாராம் தேர்தல் மன்னன் பத்மராஜன்.
போட்டியிடுவதுதான் சாதனை..
தேர்தலில் வெல்வதுதான் மற்றவர்களுக்கு சாதனை. ஆனால் எனக்கு வெற்றி தோல்வி என்பது முக்கியம் அல்ல.. போட்டியிட்டு சாதனை படைப்பதுதான் இலக்கு.. இப்படித்தான் குஜராத்தில் செய்தியாளர்களிடம் கூறியிருக்கிறார் இந்த தேர்தல் பத்மராஜன்.