இன்னும் 450-ஐ கூட தொடவில்லை.. 717 டாஸ்மாக்கில் இதுவரை எத்தனை மூடப்பட்டுள்ளது? மந்தமான பணி?
சென்னை: தமிழக முதல்வர் விஜய் தமிழகத்தில் வழிபாட்டு தலங்கள், பேருந்து நிலையங்கள், கல்வி நிலையங்கள் அருகே உள்ள 717 டாஸ்மாக் கடைகளை 2 வாரத்திற்குள் மூட உத்தரவிட்ட நிலையில் தற்போது வரை எத்தனை டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளது என்பது பற்றி அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக முதல்வராக கடந்த 10ம் தேதி தவெக தலைவர் விஜய் பதவியேற்றார். பதவியேற்ற மறுநாளிலேயே தமிழகத்தில் 717 டாஸ்மாக் கடைகளை மூட அதிரடியாக உத்தரவிட்டார்.

தமிழகத்தில் பஸ் நிலையங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் வழிபாட்டுத்தலங்கள் உள்ளிட்டவற்றில் இருந்து 500 மீட்டர் தொலைவில் உள்ள கடைகளை 2 வாரத்திற்குள் மூடவும் உத்தரவிட்டார்.
விஜய்யின் இந்த உத்தரவுக்கு தமிழகத்தில் பாராட்டுகள் குவிந்தது. குறிப்பாக பெண்கள் வரவேற்பு தெரிவித்தனர். இருப்பினும் தற்போது வரை 717 டாஸ்மாக் கடைகளும் மூடப்படவில்லை. இந்நிலையில் தான் சென்னையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையின் அமைச்சர் விக்னேஷ் இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
இந்த ஆலோசனைக்கு பிறகு அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: ''தமிழ்நாடு முதலமைச்சரால் (விஜய்) 11.05.2026 அன்று கல்வி நிலையங்கள். வழிபாட்டுத்தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகில் உள்ள 717 மதுபான சில்லறை விற்பனை கடைகளை மூடிட அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அதனடிப்படையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ் 23.05.2026 (சனிக்கிழமை) இன்று தமிழ்நாடு மாநில வாணிபக் கழக தலைமை அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
இன்று வரை 436 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளும் அவற்றுடன் இணைந்துள்ள மதுக்கூடங்களும் மூடப்பட்டுள்ளன. மீதமுள்ள மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுக்கூடங்களை மூடுவதற்கு துரித நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அமைச்சர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
மூடப்பட்ட மதுபான சில்லறை விற்பனைக் கடைகளில் பணிபுரிந்து வந்த கடைப்பணியாளர்கள் அவர்கள் நலன் பாதிக்கப்படாத வகையில் அருகிலுள்ள மதுபான சில்லறை விற்பனைக் கடைகளில் மீள பணியமர்த்துமாறு அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
மேலும் அனைத்து மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் அதனுடன் இணைந்துள்ள மதுக்கூடங்கள் இரவு 10.00 மணிக்கு மூடப்பட வேண்டுமெனவும், அதிகபட்ச சில்லறை விற்பனை விலையை விட கூடுதல் விலைக்கு விற்கும் கடைப்பணியாளர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அறிவுறுத்தினார்'' என்று கூறப்பட்டுள்ளது.
அதன்படி இன்னும் 281 டாஸ்மாக் கடைகள் மூடப்பட வேண்டி உள்ளது. கடந்த 11ம் தேதியில் இருந்து 2 வாரம் வரை முதல்வர் விஜய் காலஅவகாசம வழங்கினார். அதன்படி பார்த்தால் இன்னும் 2 நாளுக்குள் காலஅவகாசம் முடிவடைய உள்ளது. இதனால் அதற்குள் அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications