டிரம்ப் எப்படி உள்ளே வந்தார்? இந்தியா, பாக் போர் நிறுத்தம் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கேள்வி
டெல்லி: இந்தியா, பாகிஸ்தான் இடையிலான போர் நிறுத்தம் ஏற்பட்டிருப்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்று இருக்கிறது. கடந்த மூன்று நாட்களாக இந்தியா பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வந்தது. பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்களை இந்திய ராணுவம் அழித்தது.
இது பாகிஸ்தானை அதிர்ச்சி அடைய வைத்தது. இந்த சூழலில் கோழைத்தனமாக இந்திய எல்லையோர கிராமங்களில் பாகிஸ்தான் தாக்குதலில் ஈடுபட்டது. மேலும் துருக்கி நாட்டில் இருந்து வாங்கப்பட்ட ட்ரோன்களை பயன்படுத்தி கடந்த இரண்டு நாட்களாக பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது.

எனினும் இந்தியாவிடம் உள்ள அதிநவீன வான் வழி பாதுகாப்பு தொழில்நுட்பம் இருப்பதால் அனைத்து குண்டுகளும் வானிலே இடைமறித்து அழிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்தியாவும் பதில் தாக்குதல் நடத்தி பாகிஸ்தானில் உள்ள ராணுவ விமான தளங்களை அழித்தது.
இந்த சூழ்நிலையில் இந்தியா பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் போர் நிறுத்தத்தில் ஈடுபட வேண்டும் என அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ருபியோ தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தினார். இந்த நிலையில் இரு நாடுகளும் போர் நிறுத்தம் செய்ய ஒப்புக் கொண்டிருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் சமூக வலைத்தளத்தில் அறிவித்திருக்கிறார். மேலும் இருநாட்டு அரசுக்கும் அவர் வாழ்த்து தெரிவித்திருந்தார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்பி ஜான் பிரிட்டாஸ், "இந்த போர் நிறுத்தமானது இரு நாட்டுக்கும் மிகவும் நல்ல விஷயம்.
ஆனால் அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்த விவகாரத்தில் என்ன செய்தார் என்பது குறித்து எங்களிடம் எந்த தகவலும் இல்லை. இந்த விவகாரத்திற்குள் டிரம்ப் எவ்வாறு வந்தார் என்றும் எங்களுக்கு தெரியவில்லை."
"எதுவாக இருந்தாலும் நாம் அனைவரும் இரு நாடுகளுக்கு இடையே போர் பதற்றத்தை தணிக்க வேண்டும் என்றுதான் குரல் கொடுத்து வந்தோம். அதே சமயம் மத்திய அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் நாங்கள் எப்போதும் போல் துணை நிற்கின்றோம்.எனினும் அமைதி தான் சிறந்த வழி" என்று ஜான் பிரிட்டாஸ் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications