இந்தியா- பாக். வெளியுறவுத் துறை செயலர்கள் இடையே இஸ்லாமாபாத்தில் ஜன.15-ல் பேச்சுவார்த்தை
டெல்லி: இந்தியா- பாகிஸ்தான் வெளியுறவுத் துறை செயலாளர்கள் நிலையிலான பேச்சுவார்த்தை ஜனவரி 15-ந் தேதியன்று பாகிஸ்தானில் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மத்தியில் பிரதமராக மோடி பதவியேற்ற போது, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் உட்பட சார்க் அமைப்புகளின் தலைவர்களை அழைத்திருந்தார். இதன் பின்னர் அண்டை நாடுகளுக்கு மோடி பயணம் மேற்கொண்டார்.

அதே நேரத்தில் எல்லையில் பாகிஸ்தான் முன்னெப்போதையும் விட உக்கிரமான தாக்குதல்களை நடத்தி வந்தது. இதனால் இருநாடுகளிடையேயான நட்புறவில் மீண்டும் முட்டுக்கட்டை ஏற்பட்டது. சர்வதேச மாநாடுகளில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை சந்திப்பதை மட்டுமின்றி நேருக்கு நேர் பார்ப்பதையே கூட பிரதமர் மோடி தவிர்த்து வந்தார்.
இதன் பின்னர் அண்மையில் பாரீஸில் நடைபெற்ற புவிவெப்பமடைதல் தொடர்பான உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பையும் சந்தித்து பேசியிருந்தார். இதன் பின்னர் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், பாகிஸ்தான் சென்று பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்த நிலையில் ரஷ்யா, ஆப்கான் சென்றிருருந்த பிரதமர் நரேந்திர மோடி, நாடு திரும்பும் வழியில் திடீரென பாகிஸ்தான் செல்வதாக அதிரடியாக அறிவித்தார். அவரது இந்த அதிரடி பயண அறிவிப்பு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
லாகூர் சென்ற பிரதமர் மோடிக்கு நவாஸ் ஷெரீப்பின் இல்லத்தில் விருந்து அளிக்கப்பட்டது. நவாஸ் ஷெரீப் பிறந்த நாள் மற்றும் பேத்தியின் திருமணம் ஆகியவற்றில் பிரதமர் மோடி பங்கேற்றுவிட்டு நாடு திரும்பினார்.
இந்நிலையில் இந்தியா-பாகிஸ்தான் வெளியுறவுத் துறை செயலர்கள் இடையேயான பேச்சுவார்த்தை பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாதில் ஜனவரி 15-ந் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுதொடர்பாக அதிகாப்பூர்வ அறிவுப்பு எதுவும் வெளியிடப்படவில்லை.












Click it and Unblock the Notifications